×

குன்றத்தூர் அருகே பரபரப்பு குடி போதையில் தகராறு செய்த மகன் சரமாரி குத்திக் கொலை: தந்தை சிறையில் அடைப்பு

பல்லாவரம்: குடித்து விட்டு தகராறு செய்த மகனை அவரது தந்தையே சரமாரியாக கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் குன்றத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. குன்றத்தூர் அடுத்த திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் பாண்டியன் (69). இவரது மகன் நாகராஜ் (28). இவர், அதே பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தார். சமீப காலமாக நாகராஜ் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதனால், தினமும் இரவில் குடித்து விட்டு வீட்டிற்கு வரும் நாகராஜ், தனது தந்தை மற்றும் மனைவியிடம் தகராறு செய்வதையே வழக்கமாகக் கொண்டிருந்தார்.

இந்நிலையில், கடந்த 25ம் தேதி இரவு வழக்கம்போல், குடிபோதையில் வீட்டிற்கு வந்த நாகராஜ், தனது மனைவி தீபாவிடம் தகராறு செய்தார். இதனை அவரது தந்தை பாண்டியன் தட்டிக் கேட்டபோது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இருவரும் கைகளால் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.

இதில், ஆத்திரமடைந்த தந்தை பாண்டியன், வீட்டில் சமையல் செய்வதற்கு வைத்திருந்த கத்தியை எடுத்து வந்து, மகன் என்றும் பாராமல் நாகராஜ் வயிற்றில் சரமாரியாக குத்தினார். இதில் பலத்த காயமடைந்த நாகராஜ் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் நாகராஜை மீட்டு கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நாகராஜ் நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
 
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த குன்றத்தூர் போலீசார், மகனை கொலை செய்த குற்றத்திற்காக, தந்தை பாண்டியனை கைது செய்து ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். குடிப்பழக்கத்திற்கு அடிமையான மகனை, தந்தையே கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Saramari ,death , Kundirathur, drunkenness, dispute, son, chariot, stab, killing father, jail
× RELATED தேர்தல் பத்திர வழக்கில் எஸ்பிஐ...