சென்னை: அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக டாக்டர் வைதேகி விஜயகுமாரை நியமித்து தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக கவர்னர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழக கவர்னரும் தமிழக பல்கலைக்கழகங்களின் வேந்தருமான பன்வாரிலால் புரோகித், டாக்டர் வைதேகி விஜயகுமாரை அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமித்துள்ளார். அவர் அடுத்த 3 ஆண்டுகளுக்கு அந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணியில் இருப்பார். டாக்டர் வைதேகி விஜயகுமார் ஆசிரியர் பணியில் பல ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். அண்ணா பல்கலைக்கழகத்தில் அவர் 12 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியுள்ளார். அதே போல், கனடாவில் உள்ள ரியேர்சன் பல்கலைக்கழகம், சிங்கப்பூரின் தேசிய பல்கலைக்கழகம், நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உள்பட பல வெளிநாட்டு பல்கலைக்கழங்களில் வருகை பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.
அதே போல் அண்ணா பல்கலைக்கழத்தில் 6 ஆண்டுகளுக்கும் மேல் துறைத்தலைவராகவும், அண்ணா பல்கலைக்கழகம், விஐடி பல்கலைக்கழத்தின் 5 ஆண்டுகள் கல்லூரி முதல்வராக பணியாற்றி, நிர்வகித்துள்ளார். தன்னுடை பணிக்காலத்தில் 24 முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார். தேசிய, சர்வதேச அளவிலான கல்விசார் நிகழ்ச்சிகளில் 266 ஆய்வுக்கட்டுரைகளை சமர்பித்துள்ளார். அதுதவிர பல்வேறு பல்கலைக்கழங்களில் பாடத்திட்ட குழுவின் உறுப்பினராகவும், அண்ணா பல்கலைக்கழகம், விஐடி பல்கலைக்கழகம் ஆகியவற்றில் அகடாமிக் கவுன்சில் உறுப்பினராக இருந்துள்ளார். இவ்வாறு கவர்னர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.