×

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு 9 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, தமிழகத்திற்கு ஜூன் மாதத்தில் வழங்க வேண்டிய 9.19 டிஎம்சி நீரை காவிரியில் திறந்து விடும்படி கர்நாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்கள் காவிரி நீரை பகிர்ந்து கொள்வதை கண்காணிக்க, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை அமைக்கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தையும், அதோடு காவிரி நீர் ஒழுங்காற்று குழுவையும் மத்திய அரசு கடந்தாண்டு அமைத்தது. இந்த 2 அமைப்புகளிலும் நான்கு மாநிலங்களும் தங்கள் சார்பாக தலா ஒரு பிரதிநிதியை நியமித்துள்ளன. காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்ட நாளில் இருந்து, இதுவரையில் 2 முறை கூடி இருக்கிறது. கடைசியாக கடந்தாண்டு டிசம்பர் 3ம் தேதி இதன் கூட்டம் நடந்தது. ஒழுங்காற்று குழு கூட்டம் கடந்தாண்டு 3 முறையும், இந்தாண்டில் ஒருமுறையும் நடந்துள்ளது. இதற்கிடையே, அடுத்த மாதம் தொடங்க உள்ள குறுவை சாகுபடிக்கு காவிரியில் இருந்து நீர் திறந்து விடப்படுமா? என்ற கேள்வி, தமிழக விவசாயிகளிடம் எழுந்தது.     இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் 3வது கூட்டம் டெல்லியில் மத்திய நீர்வள ஆணைய தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதற்கு, இந்த ஆணையத்தின் தலைவர் மசூத் உசேன் தலைமை தாங்கினார். இதில், நான்கு மாநிலங்களையும் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டார்கள். தமிழகத்தின் சார்பாக பொதுப்பணித் துறை செயலாளர் பிரபாகரும், தலைமை பொறியாளர் சுப்ரமணியமும் பங்கேற்றனர்.

நேற்று காலை 10 மணிக்கு தொடங்கி மூன்றரை மணி நேரம் நடந்த இக்கூட்டத்தில், தமிழக அரசு தரப்பில் பல்வேறுகோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. குறிப்பாக, ‘காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி செய்வதை தடுக்க வேண்டும்.  உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால், அது பற்றி இக்கூட்டத்தில் எவ்வித ஆலோசனைகளையும் நடத்தக் கூடாது. மேகதாது தொடர்பான அனைத்து விவகாரம் மற்றும் நிகழ்ச்சி நிரல்களை ஆணையம் திரும்பப் பெற வேண்டும்’ என வலியுறுத்தப்பட்டது. மேலும், ‘ஜூன் மாத பங்கீடாக, தமிழகத்துக்கு கர்நாடகா அணைகளில் இருந்து திறந்துவிட வேண்டிய 9.19 டி.எம்.சி. தண்ணீரை ஜூன் 1ம் தேதி முதல் திறந்து விட வேண்டும். ஜூலை மாதத்தின் பங்கீடான 30 டி.எம்.சி. தண்ணீரையும் கொடுக்க வேண்டும். மே மாதம் முடிவதற்குள் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக தமிழகத்திற்கு ஒவ்வெரு மாதமும் தர வேண்டிய 2 டி.எம்.சி தண்ணீரை காவிரியில் உடனடியாக கொடுக்க வேண்டும்’ என்றும் தமிழக அதிகாரிகள் வலியுறுத்தினர். இதே கோரிக்கை புதுவை, கேரளா அரசு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.  தமிழக அரசின் கோரிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கர்நாடக அரசு அதிகாரிகள், “எங்கள் மாநிலத்தில் தற்போதுதான் பருவமழை பெய்து வருகிறது. அதனால், காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தற்போது நீர் திறக்க முடியாது. இந்த விவகாரத்தில் எங்களுக்கு கூடுதல் அவகாசம் வேண்டும்,’’ என்றனர்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு, ஆணையத்தின் தலைவர் மசூத் உசேன் பிறப்பித்த உத்தரவில், ‘‘தமிழக அரசின் கோரிக்கையை ஆணையம் ஏற்றுக் கொள்கிறது. உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் அடிப்படையில், ஜூன் மாதத்துக்கான 9.19 டி.எம்.சி தண்ணீரை தமிழகத்துக்கு கர்நாடக அரசு திறந்து விட வேண்டும். இதில், முகாந்திரம் இல்லாத எந்த காரணங்களையும் ஏற்க முடியாது. மேலும், நீர் திறப்பு குறித்த அனைத்து விவரங்களும் அடங்கிய அறிக்கையை, அனைத்து மாநிலங்களும் அடுத்த கூட்டத்தின்போது ஆணையத்திடம் கொடுக்க வேண்டும்,’’ என தெரிவித்தார். இந்த உத்தரவை ஏற்று, தனது அணைகளில் இருந்து கர்நாடகா அரசு தண்ணீர் திறந்து விட்டால், ஜூன் மாதம் முதல் வார இறுதியில் தமிழகத்திற்கு தண்ணீர் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரபாகர் விளக்கம்
கூட்டத்துக்குப் பிறகு தமிழக பொதுப்பணித் துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் அளித்த பேட்டியில், ‘‘காவிரி ஆணையத்தின் கூட்டத்தில் குறுவை சாகுபடி, தமிழக விவசாயிகளின் நிலை மற்றும் நீர் பற்றாக்குறை பிரச்னைகளை தெளிவாக எடுத்து கூறினோம். இதையடுத்துதான், காவிரியில் 9.19 டி.எம்.சி தண்ணீரை திறந்து விடும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தில் மேகதாது அணை குறித்து எதுவும் விவாதிக்கப்படவில்லை,’’ என்றார்.

மசூத் உசேன் நம்பிக்கை
ஆணையத்தின் தலைவர் மசூத் உசேன் அளித்த பேட்டியில், “காவிரியில் இருந்து தமிழகத்திற்கு விரைவில் தண்ணீர் வரும். இந்த விஷயத்தில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அனைத்து  நடவடிக்கைகளும் எடுக்கப்படு்ம்,’’ என்றார். இவரின் பேச்சு, தமிழக விவசாயிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

Tags : DMC ,Cauvery ,Karnataka , Karnataka, Tamil Nadu, open water, Cauvery Management , Action
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 68 கனஅடி