×

டெல்லியில் 7 தொகுதிகளையும் பறிகொடுத்த காங்கிரஸ்: தோல்வியை ஆராய 5 பேர் கமிட்டி அமைப்பு...10 நாளில் அறிக்கையை தர ஷீலா தீட்சித் உத்தரவு

புதுடெல்லி: டெல்லியில் 7 தொகுதிகளையும் காங்கிரஸ் கட்சி பறிகொடுத்ததால், தோல்வியை ஆராய 5 பேர் கமிட்டி அமைத்து, அம்மாநில தலைவர் ஷீலா தீட்சித் உத்தரவிட்டுள்ளார். மேலும், 10 நாளில் அறிக்கையை தயாரித்து தர அறிவுறுத்தி  உள்ளார்.நடந்து முடிந்த 17வது மக்களவை தேர்தல் முடிவுகளில் அதிக இடம் பெற்ற பாஜ கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது. குறிப்பாக குஜராத், அரியானா, டெல்லி, உத்தரகாண்ட், இமாச்சல் பிரதேசம், அருணாச்சல்  பிரதேசம், திரிபுரா, டாமன் மற்றும் டையூ, சண்டிகர் உள்ளிட்ட மாநிலங்களில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெற்றது.  நாட்டின் தலைநகரான டெல்லியில், 2009 மக்களவை தேர்தலில் 7 தொகுதிகளில் ஒன்றை கூட வெல்லாத  பாஜ, 2014 மற்றும் 2019ம் ஆண்டு தேர்தல்களில் மொத்தமுள்ள 7 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது. 2009ல் இருந்து அடுத்த 5 ஆண்டுகளுக்குள் பாஜவின் செல்வாக்கு அதிகரித்துள்ளது.

அதேநேரம் ஆளும் ஆம்ஆத்மி வருகையால் காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி சரிந்தது. நடந்து முடிந்த தேர்தலில், பாஜவை எதிர்க்க கூட்டணி சேர்வது என முடிவெடுத்தது காங்கிரஸ் மட்டும் ஆம் ஆத்மி கட்சிகள் கடைசி நேரத்தில் குழப்பி  தனித்தனியாக நின்றன. இதுவும், பாஜ வெற்றிக்கு சாதகமானது. கடந்த முறை 46 சதவீத வாக்குகளை பெற்ற பாஜ கட்சி, இந்த முறை 56 சதவீத வாக்குகளை பெற்றது. அதே நேரம் காங்கிரஸ் வெறும் 22 சதவீதமும், ஆம் ஆத்மி 18 சதவீத  வாக்குகளுமே பெற்றது. காங்கிரஸ் கட்சியின் இந்த தோல்விக்கான முக்கிய காரணமாக, கூட்டணி முடிவில் நிலைபாடாற்ற தன்மை, தொகுதிக்கு ஏற்ப வியூகங்கள் வகுக்காமை ஆகியவை அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

 காங்கிரஸ் கட்சியின் டெல்லி தலைவரும் முன்னாள் முதல்வருமான ஷீலா தீட்சித், வடகிழக்கு டெல்லி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து பாஜ வேட்பாளர் மனோஜ் திவாரி களம் இறக்கப்பட்ட நிலையில், தேர்தல்  முடிவில் 3.5 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் மனோஜ் திவாரி வெற்றி பெற்றார். கடந்த சில நாட்களுக்கு முன், ஷீலா தீட்சித்தை அவரது இல்லத்தில் சந்தித்து மனோஜ் திவாரி ஆசி பெற்றார். இந்நிலையில், காங்கிரஸ்  கட்சியின் படுதோல்வியை ஆராய 5 பேர் கொண்ட ஒரு கமிட்டி ஒன்றை அமைத்து ஷீலா தீட்சித் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, டெல்லி முன்னாள் காங்கிரஸ் அமைச்சர்கள் ஏ.கே.வாலியா, யோகநாத் சாஸ்திரி, செய்தி தொடர்பாளர் பவான் கேரா உள்ளிட்டோர் அடங்குவர். இந்த கமிட்டி அடுத்த 10 நாட்களில் தனது அறிக்கையை டெல்லி தலைமைக்கு  சமர்ப்பிக்கும். குறிப்பாக அடுத்தாண்டு நடக்கவுள்ள சட்டசபை தேர்தலுக்கான நிர்வாகிகள் மாற்றம் மற்றும் வியூகம் தொடர்பான பரிந்துரையை இக்கமிட்டியின் அறிக்கையில் தெரிவிக்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.


Tags : Congress ,constituencies ,Sheila Dikshit ,Delhi , Delhi, Congress, defeat, Sheila Dikshit
× RELATED ஏழைகளுக்கான அரசு அமைய வேண்டும் என்பது...