சென்னை: அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டுக்கு முன்னாள் மாணவர்கள் உதவி செய்யுமாறு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு பள்ளிகளில் பயின்று உயர் பதவியில், அல்லது தொழிலதிபர்களாக இருக்கும் முன்னாள் மாணவர்களும், சமூக அக்கறை கொண்ட நிறுவனங்களும், CSR எனப்படும் தங்களது சமூக பொறுப்புணர்வு நிதி மூலம் அரசு பள்ளிகளை தத்தெடுத்து உதவலாம் என கூறப்பட்டிருக்கிறது. இதன்மூலம், பள்ளிகளின் உட்கட்டமைப்பு, சுற்றுச்சுவர், வர்ணம் பூசுதல், இணையதள வசதிகள், சுகாதாரமான கழிவறைகள், ஆய்வகங்கள், நூலங்கள் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்திட முன்வருமாறு, அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அழைப்பு விடுத்திருக்கிறார்.
சமூக அக்கறை கொண்ட தொண்டு நிறுவனங்களும், அரப்பள்ளிகள் வளர்ச்சிக்கு உதவ அமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார். அரசுப்பள்ளிகளை தத்தெடுத்து உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். CSR எனப்படும், சமூக பொறுப்புணர்வு நிதி மூலம், 2018-2019ஆம் கல்வியாண்டில், 519 அரசு பள்ளிகளில், 58 கோடி ரூபாய் மதிப்பில், பள்ளிகள் உட்கட்டமைப்பு, போன்ற பணிகள் நிறைவேற்றப்பட்டதற்கு நன்றித் தெரிவித்துக் கொள்வதாகவும், அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியிருக்கிறார். இதற்கிடையே, தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அனைத்து பள்ளிகளும் ஜூன் 3ம் தேதி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 2019-20 கல்வியாண்டில் மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் முழுமையாக முடிக்க வேண்டியுள்ளதால் ஜூன் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என திட்டவட்டமாக அறிவித்துள்ளது. மாணவர்கள் நலன் கருதி ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.