ஆற்காடு: ஆற்காட்டில் பட்டப்பகலில் கல்லூரி பேராசிரியையிடம் 3 சவரன் செயினை மொபட்டில் ஹெல்மெட் அணிந்த வந்த ஆசாமி பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆற்காடு காய்க்காரத் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி அறிவுக்கரசி(40). இவர் வாலாஜாவில் உள்ள அரசுக் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் அறிவுக்கரசி ஆற்காடு பஸ் நிலையத்திற்கு தனது உறவினருடன் நடந்து சென்று கொண்டிருந்தார்.
கொல்லப்பாளையம் அருகே சென்றபோது அவ்வழியாக மொபட்டில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த மர்ம ஆசாமி, திடீரென அறிவுக்கரசி கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் தங்கச்செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார். இதனால் அதிர்ச்சியடைந்த அறிவுக்கரசி `திருடன், திருடன்’ என கூச்சலிட்டார். உடனே, அங்கிருந்தவர்கள் மர்ம ஆசாமியை துரத்தி சென்றும் பிடிக்க முயன்றும் முடியவில்லை. இதுகுறித்து அறிவுக்கரசி ஆற்காடு டவுன் ேபாலீசில் நேற்று புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சம்பவம் நடந்த தெருவில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து செயின் பறித்துச்சென்ற ஆசாமியை தேடிவருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.