பெல்காம்: இலங்கை ஏ அணியுடனான முதல் டெஸ்டில் (அங்கீகாரமற்றது), இந்தியா ஏ அணி இன்னிங்ஸ் மற்றும் 205 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை வசப்படுத்தியது.யூனியன் ஜிம்கானா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த இந்தியா ஏ அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 622 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. கேப்டன் பாஞ்ச்சால் 160 ரன், ஈஸ்வரன் 233 ரன், சித்தேஷ் 76 ரன், அன்மோல்பிரீத் 116* ரன் விளாசினர். அடுத்து களமிறங்கிய இலங்கை ஏ அணி, 2ம் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 83 ரன் எடுத்திருந்தது.
நேற்று நடந்த 3வது நாள் ஆட்டத்தில் அந்த அணி முதல் இன்னிங்சில் 232 ரன்னுக்கு சுருண்டது. டிக்வெல்லா 103, கேப்டன் பிரியாஞ்சன் 49, சமரவிக்ரமா 31 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் எடுக்கத் தவறினர். இந்தியா ஏ பந்துவீச்சில் ராகுல் சாஹர் 4, வாரியர், துபே, ஜெயந்த் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். பாலோ ஆன் பெற்று 2வது இன்னிங்சை தொடர்ந்து விளையாடிய இலங்கை ஏ அணி 52.3 ஓவரில் 185 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. சமரவிக்ரமா 48, பிரியாஞ்சன் 39, டிக்வெல்லா 27, கருணரத்னே 20 ரன் எடுத்தனர். ராகுல் சாஹர் 4, ஜெயந்த், ராஜ்பூட், வாரியர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இந்தியா ஏ அணி இன்னிங்ஸ் மற்றும் 205 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. ஈஸ்வரன் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்தியா ஏ 1-0 என முன்னிலை வகிக்க, 2வது மற்றும் கடைசி டெஸ்ட் ஹூப்ளியில் மே 31ம் தேதி தொடங்குகிறது.