மும்பை: சினிமா இயக்குனர் அனுராக் காஷ்யப் மகளுக்கு எதிராக டிவிட்டரில் பலாத்கார மிரட்டல் விடுத்த ஆசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுராக் காஷ்யப் நீண்டகாலமாக பாஜ மற்றும் அதன் கொள்கைகளையும், நரேந்திர மோடி அரசையும் எதிர்த்து வருகிறார். இந்த நிலையில் பாஜ கட்சியை சேர்ந்த ஒருவர் டிவிட்டர் பக்கத்தில் அனுராக் காஷ்யப் மகள் ஆலியாவுக்கு எதிராக ஆபாசமான கருத்துக்களை வெளியிட்டு இருந்தார். அவர் ஆலியாவுக்கு பலாத்கார மிரட்டலும் விடுத்திருந்தார்.
இந்த மிரட்டல் குறித்து ஏற்கனவே பிரதமர் மோடியிடம் டிவிட்டரில் அனுராக் காஷ்யப் முறையிட்டிருந்தார். இந்த நிலையில் அனுராக் காஷ்யப் இது தொடர்பாக மும்பை அந்தேரி மேற்கில் உள்ள அம்போலி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் அந்த ஆசாமிக்கு எதிராக இ.பி.கோ. சட்டத்தின் பிரிவுகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் அனுராக் காஷ்யப் டிவிட்டரில், “டியர் நரேந்திர மோடி சார், உங்களுடைய தேர்தல் வெற்றிக்கு பாராட்டுக்கள். அனைவரையும் அரவணைத்து செல்வதாக தாங்கள் கூறியிருப்பதற்கு நன்றி. நான் உங்களை விமர்சிக்கிறேன் என்பதற்காக என் மகளுக்கு ஆபாச செய்திகளை அனுப்பி மிரட்டி உங்கள் வெற்றியை கொண்டாடுகிற உங்களின் ஆதரவாளர்களை நான் எப்படி கையாள்வது என்பதை தயவு செய்து எனக்கு கூறுங்கள்” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.