சென்னை: மய்யம் என சொல்லிக்கொண்டு கமல்ஹாசன் யாருக்கோ ஆதரவாக செயல்படுகிறார் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார். தமிழகத்தில் வெற்றிபெற்ற காங்கிரஸ் எம்.பி.,க்கள் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து வாழ்த்து பெற தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நேற்று டெல்லி சென்றனர். அங்கு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
காங்கிரஸ் கட்சியை பொறுத்தமட்டில் ராகுல்காந்தி தான் தலைமை பொறுப்பை ஏற்று வழிநடத்தி செல்ல தகுதியானவர். அதற்கான அனைத்து அதிகாரமும் அவருக்கு உள்ளது. தமிழகத்தில் திமுக உடனான எங்களின் கூட்டணி மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக உள்ளது. தமிழகத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற எங்களது புதிய எம்.பி.,க்கள் அனைவரும் நாளையோ அல்லது நாளை மறுநாளோ ராகுல்காந்தியை சந்தித்து வாழ்த்துபெற உள்ளனர். தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்திருந்தாலும் மீண்டும் வெற்றியை கொண்டுவருவதே எங்களது இலக்காக உள்ளது.
தேர்தல் நேரத்தில் ராகுல் சிறப்பான பிரசாரத்தை மேற்கொண்டார். அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்தான். திணிக்கப்பட்ட தலைவர் அல்ல. வெற்றி, தோல்வி என்பது சகஜம். கடவுளே மகாபாரதத்தில் தோல்வி அடைந்தவர்தான். மோடியை பொறுத்தமட்டில் அவர் ஒரு மகத்தான வலது சாரி ஆவார். உலகம் முழுவதும் வலதுசாரிகள்தான் வெற்றிபெறுகிறார்கள். எங்களின் தோல்வி என்பது ஒரு சறுக்கல்தான். அதில் இருந்து மீண்டு வருவோம். தமிழகத்தில் டிடிவி.தினகரன் கட்சி என்பது ஒரு மாயை. அடிப்படை கொள்கை இல்லாத ஒரு கட்சியாகும். கொள்கை இல்லை என்றால் எந்த ஒரு விவகாரத்தையும் கையாள முடியாது.
அதிமுக, பாமக கூட்டணியும் இதே ரகத்தில்தான் உள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கமல்ஹாசன் ஒரு மகத்தான வாக்கு சதவீதத்தை பெற்றுள்ளதாக கூற முடியாது. அவர் மய்யம் என்று சொல்லிக்கொண்டு யாருக்கோ ஆதரவாக செயல்படுகிறார். மேலும், தென்னகத்தை பொறுத்த வரையில் காங்கிரஸ் கட்சியின் தற்போதைய வெற்றி தொடர்ந்து நீடிக்கும். இவ்வாறு கூறினார்.