×

சிக்கிமில் பி.எஸ்.கோலே தலைமையிலான புதிய அரசு 17 எம்எல்ஏக்களுடன் இன்று பதவியேற்பு

சிக்கிம்: சிக்கிமில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா எஸ்.கே.எம். கட்சித் தலைவர் பிரேம் சிங் தமாங் என்ற பி.எஸ்.கோலே தலைமையிலான புதிய அரசு இன்று பதவியேற்கவுள்ளது. சிக்கிமில் சிக்கிம் சட்டப் பேரவைக்கு அண்மையில் நடைபெற்ற தேர்தலில் அந்த மாநிலத்தை ஆண்ட சிக்கிம் ஜனநாயக முன்னணி (எஸ்.டி.எஃப்.) 15 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று தோல்வியடைந்தது. எதிர்க்கட்சியான சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி 17 தொகுதிகளில் வென்று ஆட்சியைக் கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து, ஆளுநர் கங்காபிரசாதை சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சித் தலைவர் பிரேம் சிங் தமாங், 17 எம்எல்ஏக்களுடன் சென்று சந்தித்து ஆட்சியமைக்க சனிக்கிழமை உரிமை கோரினார். முன்னதாக, ஊழல் வழக்கில் பிரேம் சிங் தமாங், ஓராண்டு சிறை தண்டனை பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனால் சட்ட ஆலோசனை பெற்று, ஆட்சியமைக்க அழைப்பு விடுப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று அவரிடம் ஆளுநர் தெரிவித்தார்.

இந்நிலையில் சட்ட ஆலோசனை கேட்ட பிறகு மாநிலத்தில் ஆட்சியமைக்கும்படி பிரேம் சிங் தமாங்குக்கு ஆளுநர் கங்கா பிரசாத் அழைப்பு விடுத்தார். இதையடுத்து கேங்டாக்கில் உள்ள பல்ஜோர் மைதானத்தில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் விழாவில் பிரேம் சிங் தமாங் தலைமையிலான புதிய அரசு பதவியேற்கவுள்ளது. விழாவில் பிரேம் சிங் தமாங்குக்கு பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் ஆளுநர் கங்காபிரசாத் செய்து வைக்கவுள்ளார். தமாங்குடன் சேர்த்து மேலும் சிலர் அமைச்சர்களாகப் பதவியேற்க வாய்ப்பிருப்பதாக ஆளுநர் மாளிகை வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன. சிக்கிம் கிராந்திகாரி கட்சி கடந்த 2013-ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில் கட்சி தொடங்கிய 6 ஆண்டுகளில் மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்துள்ளது. சட்டப் பேரவைத் தேர்தலில் தமாங் போட்டியிடவில்லை எனவும், அனைத்து தொகுதிகளிலும் தமது கட்சியின் வேட்பாளர்களுக்காக அவர் தீவிர பிரசாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.

Tags : government ,PS Gowle ,Sikkim , new government,led ,PS Gowle,Sikkim,sworn , 17 MLAs,today
× RELATED 102 தொகுதிகளில் முதற்கட்ட...