பெலகாவி, : ‘‘கர்நாடகாவில் மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பாஜ.வினர் ‘ஆபரேஷன் தாமரை’ திட்டத்தை பயன்படுத்தினால், பதிலுக்கு பாஜ எம்எல்ஏ.க்களை காங்கிரசுக்கு இழுக்க ‘ஆபரேஷன் கை’ திட்டத்தை பயன்படுத்த தயங்க மாட்டோம்,’’ என இம்மாநில அமைச்சர் சதீஷ் ஜாரகிஹோளி எச்சரித்துள்ளார். பெலகாவியில் ேநற்று அவர் அளித்த பேட்டி: கர்நாடகாவில் மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க, பாஜவினர் ஆபரேஷன் தாமரை திட்டத்தை நடைமுறைப்படுத்த முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஒருவேளை, இந்த திட்டத்தை பாஜ பயன்படுத்தினால் காங்கிரசார் கைகட்டிக்கொண்டு அமைதியாக இருக்க மாட்டோம்.
பதிலுக்கு பாஜ எம்எல்ஏ.க்களை காங்கிரசுக்கு இழுக்க ஆபரேஷன் கை திட்டத்தை அமல்படுத்துவோம். பாஜ.வை பார்த்து அரசியல் நடத்தவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. மேலும், வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளும் விவகாரத்தில் பாஜவை பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை.வரும் 30ம் தேதி நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றபின், கர்நாடகாவில் பாஜ.வினர் மீண்டும் ஆபரேஷன் தாமரை திட்டத்தை தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு பதிலடி கொடுக்க காங்கிரஸ் தயாராக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.