சென்னை: இலங்கை வட மாகாண முன்னாள் முதல்வரும், தமிழ் மக்கள் கூட்டணி நிறுவனரும், பொது செயலாளருமான க.வி.விக்னேஸ்வரன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியை அபார வெற்றிக்கு வழிநடத்திய உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். திமுக உங்களின் தலைமையில் எதிர்காலத்தில் மேன்மேலும் வெற்றிகளையும், சாதனைகளையும் படைத்து தமிழகத்துக்கும், உலகம் எங்கும் வாழும் தமிழ் மக்களுக்கும் மகத்தான பணிகளை மேற்கொள்ளும் என்று நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்.
அத்துடன் எமது மக்களின் பிரச்னைகளை அறிந்து கொள்வதற்காகவும் எவ்வாறு தமிழகத்துக்கும் இலங்கை தமிழ் மக்களுக்கும் இடையே சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார ரீதியான தொடர்புகளை வலுப்படுத்தலாம் என்று ஆராய்வதற்காகவும் நீங்கள் இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என்று இந்த சந்தர்ப்பத்தில் கோரிக்கை விடுக்கிறேன். இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு தயாராக இருக்கிறேன்.