கொடைக்கானல்: கொடைக்கானலில் உள்ள நட்சத்திர ஏரியில் இன்று நடந்த படகு போட்டியை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.
மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானலில் நகர் மத்தியில் நட்சத்திர ஏரி உள்ளது. இங்கு ஆண்டுதோறும் போட் அண்ட் ரோயிங் கிளப் சார்பில் படகு போட்டி நடத்தப்படும். இந்தாண்டு படகு போட்டி இன்று காலை துவங்கியது. போட்டி நாளையும் நடக்கிறது. சீனியர், ஜூனியர், கலப்பு இரட்டையர், ஆண்கள், பெண்கள், சிறுமிகள் என 15 பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. இவற்றை ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
முன்னதாக, படகு போட்டியை கொடைக்கானல் போட் கிளப் தலைவர் பவானிசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார். போட் அண்ட் ரோயிங் கிளப் செயலாளர் ராமச்சந்திரன் துரைராஜா முன்னிலை வகித்தார். போட்டி நடுவர்களாக அமிதா சட்டர்ஜி, ரஷீத், முருகன், லோகநாதன் ஆகியோர் செயல்பட்டனர். படகு போட்டி முடிவில் நட்சத்திர ஏரியில் நாளை வாத்து பிடிக்கும் போட்டி நடக்க உள்ளது. ஏற்பாடுகளை போட்கிளப் மேலாளர் செந்தில் மற்றும் ஊழியர்கள் செய்துள்ளனர்.