சென்னை: தேர்தல்களில் தொடர்ந்து சறுக்கல்களை சந்தித்து வரும் தேமுதிக மாநில கட்சி அந்தஸ்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 2005-ம் ஆண்டு தொடங்கப்பட்ட தேமுதிக 2006 சட்டமன்ற தேர்தலில் தனித்தே சந்தித்தது. தொடங்கப்பட்ட ஒரு ஆண்டிலேயே தேமுதிக 8.38 சதவீத வாக்குகளை பெற்றது. அரசியல் களத்தில் மிகவும் கவனிக்கப்பட்டது. விஜயகாந்தின் அதிரடி நடவடிக்கைகளால் 2009-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் 10.3 சதவீத வாக்குகளை பெற்றது.
2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிகமுவுடன் கூட்டணி அமைத்து 41 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக 29 இடங்களை கைப்பற்றியது. அக்கட்சி தலைவர் விஜயகாந்த், சட்டமன்ற எதிர்கட்சி தலைவரானார். மிக குறுகிய காலத்தில் அதிகரித்துவந்த தேமுதிகவின் வாக்கு சதவீதம் அதன் பிறகு படிப்படியாக சரிவை சந்தித்துள்ளது. 2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியில் அதிக இடங்களில் போட்டியிட்ட தேமுதிக படுதோல்வி அடைந்தது.
அக்கட்சியின் வாக்குவங்கியும் 5.1 சதவீதமாக குறைந்தது. 2016 சட்டமன்ற தேர்தலில் தேமுதிகவின் வாக்குவங்கி 2.39 சதவீதமாக இருந்தது. தற்போது அதிமுக கூட்டணியில் 4 தொகுதியில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்துள்ள தேமுதிக வாக்குவங்கி 2.19 சதவீதமாக குறைந்துள்ளது. இதனால் அக்கட்சிக்கான மாநில கட்சி என்ற அங்கீகாரமும் பறிபோகும் நிலை உள்ளது. இதனால் அக்கட்சியால் முரசு சின்னம் பறிபோகலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.