×

அண்ணா அறிவாலயத்தில் நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது திமுக எம்.பி.க்கள் கூட்டம்

சென்னை: சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நாளை காலை 10 மணிக்கு திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் 17வது மக்களவை தேர்தல் கடந்த மாதம் 11ம் தேதி தொடங்கி கடந்த 19ம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. தமிழகத்தில் அதிமுக கூட்டணியும், திமுக கூட்டணியும் 38 மக்களவை தேர்தலில் போட்டியிட்டது. அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக போன்ற பெரிய கட்சிகள் இடம் பெற்றிருந்தது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றிருந்தன.

மக்களவைத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 38 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. இந்த சூழ்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினை வெற்றி பெற்ற வேட்பாளர்கள் நேற்று மாலை முதல் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் நாளை காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் திமுக முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

மேலும் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்கள் எம்.பி.க்கள் கூட்டத்தில் பங்கேற்பர். இந்த கூட்டத்தில் நாடாளுமன்றத்தின் திமுக குழு தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவது குறித்தும், அதே போல நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் திமுகவின் நாடாளுமன்ற வேட்பாளர்கள் செயல்படுவது குறித்தும் முடிவு எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக பிரச்சனைகள் குறித்து எவ்வாறு விவாதிக்க வேண்டும், எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனை வழங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Tags : DMK ,meeting ,Anna Shiva , Anna Arivalayam, DMK, MPs meeting
× RELATED திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம்