இடாநகர்; அருணாச்சல பிரதேசத்தில் மீண்டும் பாஜ ஆட்சி அமைக்கிறது. சிக்கிம் மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலவுகிறது. மக்களவை தேர்தலுடன் அருணாச்சல பிரதேசம், சிக்கிம், ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலும் நடந்தது. ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது. ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் ஆட்சியை தக்கவைத்துள்ளது. அதேபோல், அருணாச்சல பிரதேசத்தில் பாஜ.வும் தனது ஆட்சியை தக்கவைத்துள்ளது. அருணாச்சல பிரதேசத்தில் மொத்தம் உள்ள 60 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில், ஆளும் பாஜ.வுக்கும் காங்கிரசுக்கும் கடும் போட்டி நிலவியது. நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் பாஜ 29 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 3 தொகுதிகளை கைப்பற்றியது. ஐக்கிய ஜனதா தளம் 4, தேசிய மக்கள் கட்சி ஒரு தொகுதிகளை கைப்பற்றின. முடிவுகள் அறிவிக்கப்படாத தொகுதிகள் பலவற்றில் பாஜ. முன்னிலை வகிக்கிறது. இதனால், இம்மாநிலத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது.
சிக்கிமில் மொத்தம் 32 இடங்களில், சிக்கிம் கிரந்திகரி மோர்ச்சா (எஸ்கேஎம்) கட்சி 12 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆளும் சிக்கிம் ஜனநாயக முன்னணி (எஸ்டிஎப்) கட்சி 11 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இம்மாநிலத்தில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டப்பேரவை ஏற்படலாம் என கருதப்படுகிறது.