×

மாத்திரை சாக்லெட் கொடுத்து பள்ளி சிறுமியை கடத்த முயற்சி: பைக் ஆசாமிகளுக்கு வலை

திருவொற்றியூர்:  மாதவரத்தில் மாத்திரை சாக்லெட் கொடுத்து பைக்கில் வந்த ஆசாமிகள் கடத்த முயன்றனர். சிறுமி கூச்சலிட்டதால்  அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். கொடுங்கையூரை சேர்ந்தவர் 8 வயது சிறுமி. அதேப் பகுதி பள்ளியின் 3ம் வகுப்பு மாணவி. தற்போது பள்ளி விடுமுறை என்பதால், சிறுமி மாதவரம் தணிகாசலம் நகர், ஈ பிளாக்கில் உள்ள தனது பெரியம்மா வீட்டில் தங்கி உள்ளார். நேற்று முன்தினம் இரவு வீட்டு வாசலில் சிறுமி விளையாடியபோது   அவ்வழியாக பைக்கில் வந்த 2 பேர் சிறுமியிடம் சாக்லெட் கொடுத்து சாப்பிடுமாறு கூறியுள்ளனர். சிறுமி சாப்பிட மறுத்ததால் கையை பிடித்து இழுக்க முயற்சித்தனர். உடனடியாக சிறுமி கூச்சலிட்டு கத்தியுள்ளார்.  

சிறுமியின் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததால் ஆசாமிகள் பைக்கில் தப்பி சென்றனர். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் மாதவரம் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து சாக்லெட்டை சோதனையிட்டபோது அதில், மாத்திரை இருந்ததாக கூறப்படுகிறது. அது மயக்க மாத்திரையா? என்கிற கோணத்தில் பைக் ஆசாமிகள் குறித்து சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.



Tags : tablet, chocolate, School girl, smuggle
× RELATED தமிழக – ஆந்திர எல்லையான எளாவூரில்...