×

சேலத்தில் வீட்டுக்கு வெளியே விளையாடி கொண்டிருந்தபோது கடத்தப்பட்ட 3 வயது குழந்தை பத்திரமாக மீட்பு

சேலம்: சேலத்தில் வீட்டுக்கு வெளியே விளையாடி கொண்டிருந்தபோது கடத்தப்பட்ட 3 வயது குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. சேலம் நால்ரோடு பகுதியில் உள்ள தம்மணன் காலனியில் பாலாஜி-நித்யா தம்பதியர் வசித்து வருகின்றனர். இவர்களது 3 வயது ஆண் குழந்தை யோகேஷ்வரன், இன்று மதியம் சுமார் 12.30 மணியளவில் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் குழந்தை யோகேஷ்வரனை கடத்திச் சென்றுள்ளனர். குழந்தை காணாமல் போனதால் பதற்றமடைந்த பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர், அப்பகுதியில் உள்ள 5 சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், முகத்தை மூடியபடி வந்த 2 பேர், குழந்தை யோகேஷ்வரனை இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்றது தெளிவாக பதிவாகி இருந்தது.

இதனிடையே, குழந்தையின் பெற்றோரிடம் புகாரை பெற்ற சேலம் மாநகர போலீஸ் கமிஷனர், உதவி கமிஷனர் தலைமையில் தனிப்படை ஒன்றை அமைத்து உத்தரவிட்டார். இதையடுத்து, அனைத்து பகுதிகளிலும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அதமட்டுமல்லாது, சந்தேகிக்கும் வகையிலான நபர்கள் குறித்து தகவல் தெரிவிக்குமாறு போலீசார் வேண்டுகோள் விடுத்திருந்தனர். இந்த நிலையில், சேலம் முள்ளகாடு பகுதியில் ஒரு குழந்தை தனியாக அழுதுகொண்டிருப்பதாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அப்பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர், குழந்தை யோகேஷ்வரனை பத்திரமாக மீட்டனர். ஆனால், கடத்தியவர்கள் சேலத்தாம்பட்டி பகுதியில் குழந்தையை விட்டுச் சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, கடத்தல்காரர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். எனினும் பட்டப்பகலில் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


Tags : kid ,home ,Salem , Salem, kidnapping, child, rescue, CCTV
× RELATED வாக்களிக்க வந்தபோது ‘இந்திய நாடு என் வீடு’- பாடலை பாடினார் நடிகர் வடிவேலு