சென்னை: காளீஸ்வரி ரிபைனரி பிரைவேட் லிமிடெட் சார்பில் கடந்த 1993 முதல் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சூரியகாந்தி எண்ணெய், கடலை எண்ணெய், பார்ம் ஆயில், ஆலிவ் எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு எண்ணெய் வகைகள் கோல்டு வின்னர் என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் காளீஸ்வரி நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், காளீஸ்வரி நிறுவனத்தின் டிரேட் மார்க் முத்திரையை போலியாக வரைந்து மற்ற நிறுவனங்கள் தவறாக பயன்படுத்தி அவர்களது பொருட்களை விற்பனை செய்து வருகிறார்கள். இதனால், உண்மையான கோல்டு வின்னர் எது என்று மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். கோல்ட் ஸ்டார், வின்னர் கோல்ட், மினிஸ்டர் கோல்ட் உள்ளிட்ட 22 பெயர்களில் எண்ணெயை விற்பனை செய்து வருகிறார்கள்.
குறிப்பாக திண்டுக்கல்லை சேர்ந்த ஸ்ரீராம் டிரேடர்ஸ், தேனியை சேர்ந்த ஆர்.ஜி. ஏஜென்சி, ஆற்காட்டை சேர்ந்த காளசக்தி நிறுவனம் உள்ளிட்ட 9 நிறுவனங்கள் எங்கள் நிறுவனத்தின் முத்திரையை தவறாக பயன்படுத்தி வருகிறார்கள். எனவே, எங்கள் நிறுவனத்தின் முத்திரையை இவர்கள் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இந்த மனு நீதிபதி வைத்தியநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் விஜயன் சுப்பிரமணியன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர் நிறுவனத்தின் முத்திரையை மனுவில் கூறப்பட்டுள்ள 9 நிறுவனங்கள் பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.