* சாலைப் பணியின்போது உடைந்தது
சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நெம்மேலி என்ற இடத்தில் கடல்நீரை குடிநீராக்கும் திட்ட தொழிற்சாலை உள்ளது. இங்கு நாளொன்றுக்கு ஒன்றரை கோடி லிட்டர் குடிநீர் சுத்திகரிக்கப்பட்டு தென்சென்னை பகுதிக்கு விநியோகிக்கப்படுகிறது. திருவான்மியூர், பாலவாக்கம், நீலாங்கரை உள்ளிட்ட பகுதிகளுக்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாகவும், வேளச்சேரி, பள்ளிக்கரணை, அடையாறு, தரமணி உள்ளிட்ட பகுதிகளுக்கு பழைய மாமல்லபுரம் சாலை வழியாகவும் குழாய்கள் மூலம் தண்ணீர் எடுத்து செல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது கேளம்பாக்கம் அருகே படூர் என்ற இடத்தில் பழைய மாமல்லபுரம் சாலையின் புறவழிச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கு இணைப்புச் சாலை அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லும் ராட்சத குழாய் உடைந்துவிட்டது.
இதனால் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கீழ் சென்னை செல்லும் குடிநீர் வீணாகி சாலையில் வெள்ளமென சென்றது. இது குறித்து, கடல்நீரை குடிநீராக்கும் திட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது. உடைப்பு ஏற்பட்ட குடிநீர் குழாயை சரி பார்க்கும் பணி நடைபெற்று முடிந்த பிறகே பள்ளிக்கரணை, வேளச்சேரி, தரமணி பகுதிகளுக்கு தண்ணீர் விநியோகம் செய்ய இயலும் என்ற தகவல் வெளிவந்துள்ளது.