திருச்செந்தூர்: திருச்செந்தூர் - பாளை ரோட்டில் சாலையோரம் கேரள மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. திருச்செந்தூர் - பாளை மெயின் ரோடு ராணிமகாராஜபுரம் சாலையோரம் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு கிடந்தன. லேபிள் இல்லாத ஊசி, மருந்து பாட்டில்கள், உடைக்கப்பட்ட தடுப்பூசிகள் உள்ளிட்ட பல மருந்து கழிவுகளை யாரோ மர்மநபர்கள் வாகனத்தில் வந்து கொட்டிச் சென்றுள்ளனர். இவை கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட மருத்துவ கழிவுகளாக இருக்கலாம் எனத் தெரிகிறது.
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்த மருந்து கழிவுகள் இங்கேயே கிடக்கின்றன. இவற்றுடன் காலி மதுபாட்டில்களும் வீசப்பட்டுள்ளன. இரவு நேரத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் மருந்து கழிவுகளை கொட்டியுள்ளனர். எனவே அவற்றை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள், தமிழகத்திற்குள் கொண்டு வருவதை தடுக்கும் வகையில் சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அப்படியிருந்தும் ஒருசில நேரங்களில் மருத்துவ கழிவுகளை நள்ளிரவு நேரத்தில் தமிழகத்தில் கொட்டப்படுவது தொடர்கதையாகி வருகிறது.