×

ஐம்பதிலும் காதல் வரும்... காதல் வந்தால் மோசம் வரும்... 25 வயது இளம்பெண்ணிடம் செயின், மோதிரத்தை இழந்த 60 வயது பெரிசு!

சுரண்டை: அனாதை என்று கூறிய பெண்ணை பார்த்ததும் விவசாயி ஒருவர் காதல் கொண்டார். அந்த பெண் திருமணத்திற்கு சம்மதித்ததால் உடனே நகை கடைக்கு அழைத்து வந்து தாலி செயின், மோதிரம் பட்டு சேலை என பல ஆயிரத்தை  செலவழித்தார். கடைசியில் அந்த பெண் அவருக்கு டாட்டா காட்டிவிட்டு சென்றுவிட்டார். இந்த பரபரப்பு சம்பவம் சுரண்டையில் நடந்துள்ளது. நெல்லை மாவட்டம் ஊத்துமலை போலீஸ் சரகத்தில் உள்ளது மருக்கலாம்குளம் கிராமம். இந்த ஊரைச்சேர்ந்தவர் விவசாயி தங்கப்பாண்டியன்(60). சில ஆண்டுகளுக்கு முன் இவரது மனைவி இறந்துவிட்டார். இவர்களுக்கு குழந்தைகளும்  இல்லை. மனைவி இழப்பு அவரை பெரிதும் வாட்டியது. விவசாய வேலைகளில் கவனத்தை செலுத்தி அந்த சோகத்தை மறக்க முயன்றார். அவராகவே வீட்டில் சமைத்து சாப்பிட்டார்.

இந்நிலையில் நேற்று காலை 8 மணியளவில் 25 வயது மதிக்கத்தக்க அழகான ஒரு இளம் பெண் இவரது வீட்டிற்கு வந்தார். அய்யா... வீட்டில் யாரு இருக்கிறா என கேட்டார். உடனே வெளியில் வந்து எட்டிப்பார்த்த தங்கபாண்டியனுக்கு அங்கு  தேவதைபோல் நின்று கொண்டிருந்த இளம்பெண்ணை பார்த்ததும் கொஞ்சம் ஷாக் அடித்தது. சுதாரித்துக்கொண்டு. ``யாருமா நீ? உனக்கு என்ன வேண்டும் என்று பரிவுடன் விசாரித்தார். உடனே அந்த அந்த பெண் ஓவென கதறி அழும் நிலைக்கு  வந்துவிட்டார். அய்யா உங்களை பார்த்தா நல்ல மனுஷன் மாதிரி தெரியுது. எனக்கு அம்மா, அப்பா, உறவினர்கள் யாரும் கிடையாது. நான் ஒரு ஆனாதை. எங்கு வேலை கேட்டு சென்றாலும் என்னை ஒருமாதிரியாக பாக்குறாங்க? அதான்  உங்களை கேள்விப்பட்டு இங்கு வந்தேன். உங்க மனைவி வேறு இறந்திட்டதா சொன்னாங்க. எனக்கு நீங்க ஒரு வேலை போட்டு கொடுத்தா... உங்களுக்கு வாய்க்கு ருசியா சமைச்சு போடுவேன். உங்களை நல்லபடியா பாத்துக்குவேன் என்று  கண்ணீர் விட்டார்.

அந்த பெண்ணின் பேச்சு தங்கப்பாண்டியன் மனதை கரைத்தது.ஐம்பதிலும் ஆசைவரும்....ஆசையுடன் பாசம் வரும்... என்ற பாடல் வரிகள் போல், ஒரு இனம்புரியாத ஆசை அவரது மனதில் தோன்றியது. அது ஆசை என்பதை  விட காதல் என்றுதான் சொல்லவேண்டும். சுற்றிவளைக்காமல் நேரடியாக, ஏம்புள்ள... நீயும் அனாதை என்கிறே..நானும் உன்ன மாதிரிதான். பேசாமா நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டா என்ன? என்று வெளிப்படையாக  கேட்டார்.இதை எதிர்பார்த்து காத்திருந்ததுபோல் அந்த பெண், அய்யா உங்க அந்தஸ்துக்கு இது சரி வருமா? யோசிச்சிதான் இந்த முடிவை எடுத்தீங்களா? என்று உருகினார். எனக்கு உன்னை பிடிச்சிருக்கு... உனக்கு பிடிச்சிருக்கா, இல்லையா என்று தங்கப்பாண்டியன் கேட்கவும், ``அய்யா உங்கள கல்யாணம் பண்ணிக்க யாருக்கு கசக்கும்... நான் ரெடி’’ என்றார்.உடனே தங்கபாண்டியன் வீட்டில் சேமித்து வைத்திருந்த  பணத்தை எடுத்துக்கொண்டு, ``வா இப்பவே சுரண்டைக்கு சென்று தாலி செயின், மோதிரம், பட்டுச்சேலை எல்லாம் வாங்கிட்டு வருவோம் என உரிமையோடு அந்த பெண்ணை அழைத்துக்கொண்டு பஸ் பிடித்து சுரண்டை வந்தார்.

 நகைகடையில்  தாலி செயின் மற்றும் அரை பவுனில் மோதிரம், வாங்கினர். அதன்பிறகு ஜவுளிக்கடையில் பட்டுச்சேலை எடுத்தனர். அவர் தன் பங்கிற்கு பட்டு வேட்டி வாங்கி கொண்டார். கண்டதும் காதல், கொண்டது கோலம் என்பதுபோல் திருமண  ஏற்பாடுகள் மின்னல்வேகத்தில் நடந்தது. புதுப்பொண்டாட்டியாகப்போகும் அந்த பெண்ணுடன் தங்கப்பாண்டி சுரண்டை பஸ் நிலையம் வந்தார். அங்கு ஒரு கடையில் டீ குடித்தனர். டீ குடித்த சிறிது நேரத்தில், அய்யா என்கு வயித்த கலக்குது. நான்  பாத்ரூம் போய்விட்டு வந்துவிடுகிறேன் என்று வயிற்றை பிடித்தபடி பட்டுச்சேலையை மட்டும் தங்கப்பாண்டியனிடம் கொடுத்தார். தாலி செயின், மோதிரத்தை மட்டும் தான் வைத்துக்கொண்டு பாத்ரூம் நோக்கி சென்றார். சென்றவர் சென்றதுதான்.

 தங்கப்பாண்டியன் பலமணி நேரம் அங்கு காத்திருந்ததுதான் மிச்சம் அந்த பலே கைகாரி நகையுடன் கம்பி நீட்டிவிட்டார்.  அதன்பிறகுதான் அவருக்கு தெரிந்தது. அவள் ஒரு மோசடிக்காரி என்று. உடனே சுரண்டை போலீஸ் நிலையம் சென்று புகார் செய்தார்.
போலீசார் பஸ் நிலையம் மற்றும் அவர்கள் சென்ற இடத்தில் உள்ள சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்ய வருகிறார்கள். ஏற்கனவே இரு வாரங்களுக்கு முன் மூதாட்டி ஒருவருக்கு உதவித்தொகை வாங்கி தருவதாக கூறி ஆசாமி ஒருவர்  நகையை பறித்துச்சென்றார். இப்போது யாரோ ஒரு பெண் வந்து, நான் அனாதை. எனக்கு வாழ்வு கொடுங்கள் என்றாராம். உடனே அந்த பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்த விவசாயி நகையை பறிகொடுத்தாராம். இதுபோன்ற மோசடி  பெண்கள், இன்னும் என்னென்ன அவதாரம் எடுக்க போகிறார்களோ எதற்கும் உஷாராக இருக்க வேண்டியது நாம்தான்.

Tags : Chinny , Love, young girl, chain, ring, biryu!
× RELATED நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் சப் கலெக்டராக பொறுப்பேற்பு