வேலூர்: அரக்கோணம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டதால் 1 மணி நேரத்திற்கும் மேலாக ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த மேல்பாக்கம் ரயில் நிலையம் அருகே கார்களை ஏற்றி சென்ற சரக்கு ரயிலின் இரண்டு பெட்டிகள் திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இன்று அதிகாலை சரக்கு ரயில் இன்ஜினுடன், 14 பெட்டிகளை இணைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுப்பட்டனர். அப்போது 5 மற்றும் 6ஆவது பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கி தடம் புரண்டன. தகவல் அறிந்து சென்ற ரயில்வே ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தடம் புரண்ட ரயில் பெட்டிகளை சரி செய்யும் பணியில் ஈடுப்பட்டனர்.
இதன் காரணமாக காட்பாடியில் இருந்து அரக்கோணம் வழியாக செல்லும் ரயில்களான சென்னை செல்லும் பழனி விரைவு ரயில், பெங்களூரு மெயில், மேட்டுப்பாளையம் விரைவு ரயில், மங்களூர் விரைவு ரயில், ஆலப்புழா விரைவு ரயில், காவேரி விரைவு ரயில், சேரன் விரைவு ரயில் உள்ளிட்ட ரயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டன. ரயில் தடம் புரண்ட இடத்தில் சென்னை கோட்டம் மேலாளர் மகேஷ் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். பின்பு அதிகாரிகள், ஊழியர்கள் விரைந்து தடம் புரண்ட பெட்டிகளை மீட்டனர். இதையடுத்து தண்டவாளம் சரி செய்யப்பட்ட பின்பு ஒன்றன்பின் ஒன்றாக 90 நிமிடங்கள் தாமதத்திற்கு பின்பு ரயில்கள் புறப்பட்டு சென்றன.