×

காரைக்காலில் இருந்து திருச்சிக்கு கடத்தி வந்த மதுபாட்டில் பெட்டி பெட்டியாக பறிமுதல்

நாகை: வாக்கு எண்ணிக்கை அன்று கூடுதல் விலைக்கு விற்க காரைக்காலில் இருந்து லோடு ஆட்டோவில் திருச்சிக்கு கடத்தி வந்த மது பாட்டில்கள் பெட்டி பெட்டியாக பறிமுதல் ெசய்யப்பட்டது. நாகை மாவட்டம் நாகூர் அருகே உள்ள வாஞ்சூர் சோதனை சாவடியில் இன்று அதிகாலை இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் எஸ்ஐகள் மோகன்ராஜ், ராஜேந்திரன், மாரியப்பன், ஏட்டு சாலமன் சார்லஸ் ஆகியோர் இன்று அதிகாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது காரைக்காலில் இருந்து வந்த லோடு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். ஆட்டோவில் தண்ணீர் பாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இந்த பாட்டில்களுக்கு பின்னால் மது பாட்டில்கள் பெட்டி பெட்டியாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. புல் பாட்டில் 375, பீர் பாட்டில் 400 மற்றும் 27 பெட்டிகளில் குவார்ட்டர் பாட்டில்கள் இருந்தன. இவற்றின் மதிப்பு சுமார் 2 லட்சம். இந்த மது பாட்டில்களையும், லோடு ஆட்டோவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

லோடு ஆட்டோ டிரைவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர், திருச்சி உறையூர் ஜக்கம்மாள் கோயில் தெருவை சேர்ந்த அருண்குமார்(32) என்பது தெரியவந்தது. திருச்சியில் இருந்து நாகூருக்கு செருப்பு லோடு ஏற்றிச்சென்ற அருண்குமார், வரும் வழியில் மதுபாட்டில்களை வாங்கி வந்துள்ளார். தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 23ம் தேதி எண்ணப்படுகின்றன. அன்றைய தினம் மதுக்கடைகளுக்கு விடுமுறை. எனவே திருச்சியில் கள்ள மார்க்கெட்டில் கூடுதல் விலைக்கு விற்க மதுபாட்டில்களை அருண்குமார் வாங்கி சென்றிருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இந்த மது பாட்டில் கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்றும் போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags : Karaikal ,Trichy , Karaikal, Trichy, Alcohol
× RELATED விழிப்புணர்வு வாசகத்துடன் பால்...