×

திமுக கூட்டணிக் கட்சிகளின் வெற்றியை தடுக்க ஆட்சியாளர்கள் திட்டம்: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை: திமுக கூட்டணிக் கட்சிகளின் வெற்றியை தடுக்க ஆட்சியாளர்கள் திட்டமிட்டு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு வருகின்றனர் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதிகார வெறிக்காக மத்திய, மாநில அரசுகள் எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய நிலை உள்ளதாக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். மத்திய, மாநில அரசுகள் தேர்தல் ஆணையத்தின் கைகளை பின்பக்கமாக வைத்து கட்டியுள்ளதாகவும் ஸ்டாலின் புகார் கூறியுள்ளார்.

வெற்றியை அறுவடை செய்யும் நேரத்தில் அதிக கவனமாக இருக்க வேண்டும் என்று வாக்கு எண்ணிக்கை மைய முகவர்களுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். மேலும் கோவை, ராமநாதபுரம், கரூர், தேனியில் வெற்றிபெற அதிமுக - பாஜக கூட்டணி எந்த எல்லைக்கும் செல்லும் என்று தெரிவித்துள்ளார். ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கையிலும் மிகவும் விழிப்புடனும், கவனமாகவும் இருக்க வேண்டும் என்றும் ஆளுங்கட்சி மற்றும் அதிகாரிகளின் மோசடித்தனங்கள் நடக்காத வகையில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

மக்கள் தீர்ப்பை அதிகாரத்தின் மூலம் திருத்தி எழுத ஆட்சியில் இருப்பவர்கள் திட்டமிடுவதாக  ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். வாக்கு எந்திரங்களுக்கு வைக்கப்பட்ட சீல் முறையாக உள்ளதா என்பதை திமுக முகவர்கள் உறுதிப்படுத்திட வேண்டும். அறுவடை நேரத்தில் அசதி ஏற்பட்டால் நொடிப்பொழுதில் அதை களவாடி செல்ல தயாராக இருக்கிறார்கள் என திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கருத்து கணிப்புகளை திமுக ஒருபோதும் பொருட்படுத்தாது என்றும் மத்திய அரசில் திமுக அங்கம் வகிக்குமா? என்பதை 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு தெரிவிக்கிறேன் என்றும் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார்.

Tags : Rulers ,alliance parties ,DMK ,MK Stalin , Stalin, charge, DMK, Election
× RELATED தேர்தல் பணிகள் குறித்து திமுக கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டம்