டெல்லி : டெல்லியில் இரு தரப்பினருக்கு இடையே நடந்த மோதலில் இரண்டு சந்தேகிக்கப்படும் குற்றவாளிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இது குறித்து போலீசார் கூறியதாவது; பிரவீன் கெல்லாட் நவாடா பகுதியில் வசித்து வருகிறார். விகாஸ் தலால் மீது டெல்லி மற்றும் ஹரியானா காவல் நிலையத்தில் பல கொலை முயற்சி வழக்குகள்,பணம் பறித்தல் மற்றும் கொள்ளை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த இருவரும் டெல்லியின் பரபரப்பான துவாரகா மோர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே நேற்று மாலை 4 மணிக்கு சொத்து பிரச்னை காரணமாக மாறி மாறி 15 முறைக்கும் மேல் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
உடனே தகவல் அறிந்து விரைந்த போலீசார், அவர்களுக்கு இடையேயான மோதலை நிறுத்த துப்பாக்கியால் சுட்டுள்ளனர். போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் விகாஸ் தலால் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த மோதலில் பிரவீன் கெல்லாட் என்பவரை மற்றொரு தரப்பினர் சுட்டுக்கொன்றனர். பின்னர் பிந்தாப்பூர் போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்து, தப்பிச்சென்ற மற்றவர்களை தேடி வருகின்றனர். முன்னதாக விகாஸ் தலால் 2018-ம் ஆண்டில் ஹரியானா போலீஸ் காவலில் இருந்து தப்பி சென்றது குறிப்பிடத்தக்கது.