×

பொள்ளாச்சி பாலியல் வழக்கு கோவையில் 3 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக கோவையில் 3 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் கடந்த 2 நாளாக விசாரணை நடத்தினர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்களை ஆபாசபடம் எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகியோரை பொள்ளாச்சி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு பின்னர் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் குற்றவாளிகளின் வீடுகளில் சோதனை நடத்தினர். சோதனையின் போது முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது. இந்த சோதனை வீடியோவிலும் பதிவு செய்யப்பட்டது. மேலும் அருகில் உள்ள வீடுகளில் வசிப்பவர்களிடமும் விசாரித்தனர்.

அப்போது அங்கு யார்? யார்? வந்து சென்றார்கள், பெண்களை அழைத்து வருவதை பார்த்திருக்கிறீர்களா? என பல கேள்விகளை கேட்டு பதிவு செய்தனர். ஏற்கனவே திருநாவுக்கரசு, சபரிராஜனை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி உள்ளனர். இந்த நிலையில் சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ சட்ட ரீதியான ஆலோசனை மேற்கொண்டுள்ளது. இதற்கிடையில் கோவை மாவட்டத்தை சேர்ந்த மேலும் 3 வாலிபர்களிடம் விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பியிருந்தனர். அவர்களை கோவை ரேஸ்கோர்சில் உள்ள மத்திய அரசு அலுவலகத்துக்கு வரவழைத்து கடந்த 2 நாட்களாக ரகசிய விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளதால் மேலும் பலர் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Tags : CBI ,Pollachi , Pollachi, Sexual Case, Coimbatore, CBI Officers, Investigation
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...