திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் நூதன முறையில் கடத்தி வந்த ரூ.41.50 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று அதிகாலை மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு ஏர் ஏசியா விமானம் ஒன்று வந்தது. அதில் வந்த பயணிகளிடம் விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஹக்கீம் என்பவர் தனது ஆசனவாயில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிந்தது. உடனடியாக அவரிடமிருந்து தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதேபோல் துபாயில் இருந்து இலங்கை வழியாக திருச்சி வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணிகளை சோதனை செய்தனர். அப்போது ராமநாதபுரத்தைச் சேர்ந்த நாகூர் மற்றும் அராபத் ஆகிய இருவர் தங்கள் ஆசன வாயிலில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தியது தெரிய வந்தது. இவர்கள் மூவரிடமிருந்து 1,300 கிராம் எடை கொண்ட ரூ.41.50 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதிகாரிகள் அவர்களிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.