ஊட்டி: தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று சிங்காரா மின் நிலையம், தெப்பக்காடு யானைகள் முகாமை பார்வையிட்டார். முகாமில் யானைகளுக்கு உணவு வழங்கினார்.தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கடந்த 15ம் தேதி ஊட்டிக்கு வந்தார். 17ம் தேதி மலர் கண்காட்சியை துவக்கி வைத்தார். வரும் 22ம் தேதி வரை ஊட்டியிலுள்ள ராஜ் பவனில் தங்கியுள்ளார். ஒரு வார காலத்தில் நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அதன்படி நேற்று அவர் தங்கியுள்ள ராஜ்பவன் மாளிகையில் கோடை விழாவின் ஒரு பகுதியாக பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்டத்தில் வாழும், தோடர், கோத்தர், பெட்ட குரும்பர், முள் குரும்பர், இருளர் பழங்குடியின மக்களின் நடன நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, படுகர் இன மக்களின் நடன நிகழ்ச்சிகள் நடந்தது.
ஊட்டி அருகேயுள்ள சிங்காராவில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கட்டுப்பாட்டில் இரு மின் நிலையம் உள்ளது. இந்த மின் நிலையத்துக்கு நேற்று தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சிங்கரா மின் நிலையத்திற்கு சென்றார். அங்கு மின்வாரிய அதிகாரிகளுடன் உரையாடினார். நேற்று மதியம் மதியம் 2 மணியளவில் அவர் நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காட்டிற்கு வந்தார். வனத்துறை வாகனத்தில் முதுமலை புலிகள் காப்பக பகுதிக்குள் சவாரி மேற்கொண்டார். வனத்துறை சார்பில் யானை சவாரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அங்கு 3.30 மணியளவில் பலத்த காற்றுடன் கூடிய மழை சுமார் ஒரு மணி நேரம் பெய்தது. இதில் சவாரிக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த யானைகளும், அதன் மேல் கட்டப்படும் மெத்தைகளும் நனைந்தன. இதனால் கவர்னரின் யானை சவாரி ரத்தானது. எனவே அங்கிருந்து தெப்பக்காடு யானைகள் முகாமில் அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் யானைகளுக்கு கரும்பு உள்ளிட்ட உணவுகளை வழங்கினர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ஊட்டிக்கு சென்றார்.