×

ஏசி வெடித்து 3 பேர் பலியான சம்பவத்தில் அதிரடி திருப்பம் பெற்றோர், தம்பியை சொத்துக்காக கொன்ற அதிமுக பிரமுகர் கைது: உடந்தையாக இருந்த மனைவியும் சிக்கினார்

திண்டிவனம்:  திண்டிவனம் காவேரிப்பாக்கம் சுப்பராயன் தெருவை சேர்ந்த அதிமுக பிரமுகர் ராஜி (60). கடந்த 15ம் தேதி இவரது வீட்டில் இருந்த ஏசி வெடித்து தீப்பிடித்து எரிந்ததில் ராஜி, அவரது மனைவி கலைச்செல்வி(52), இளையமகன் கவுதமன்(27) ஆகியோர் இறந்தனர். திண்டிவனம் போலீசார் 3 பேரின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவ அறிக்கையில், ராஜியின் கழுத்தில் வெட்டுக்காயம் இருப்பதாக கூறியதை தொடர்ந்து இது விபத்து அல்ல கொலை என போலீசார் முடிவு செய்தனர்.

இதில், மூத்த மகன் கோவர்த்தனன் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதன்படி, சம்பவம் நடந்த வீட்டில் அடுத்த அறையிலிருந்த ராஜி, கலைச்செல்வி தம்பதியரின் மூத்த மகனான அதிமுக பிரமுகர் கோவர்த்தனன் (30) மற்றும் அவரது மனைவி தீபா காயத்ரி (24) ஆகியோரிடம் நடத்திய விசாரணையில் முரண்பட்ட தகவலை கிடைத்தது.  இதையடுத்து, நேற்று 2 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, பெற்றோர் மற்றும் சகோதரனை தீ வைத்து கொன்றதாக கோவர்த்தனன் கூறினார்.

இதுபற்றி, போலீசாரிடம் அவர் கூறியதாவது: எனது பெற்றோர் சிறுவயதில் இருந்தே எனது தம்பி மீதுதான் பாசம் வைத்து வந்தனர். என்னிடம் அவர்கள் ஒருபோதும் பாசமாக இருந்ததில்லை. எனினும், நான் பட்டப்படிப்பு முடித்துவிட்டு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணி செய்து வந்தேன். அதன்பின்னர் மல்லி பார்த்தான் தெருவில் டியூஷன் சென்டர் நடத்தி வந்தேன். அதில் நஷ்டம் ஏற்பட்டதையடுத்து டியூசன் சென்டரையும் மூடிவிட்டேன். இப்போது, 2 கார்களை வைத்து டிராவல்ஸ் நடத்தி வருகிறேன்.

இதனிடையே கடந்த 7 மாதத்துக்கு முன் நடந்த எனது திருமணத்தை மிகவும் எளிமையான முறையில் நடத்தினர். ஆனால், தற்போது, எனது தம்பி கவுதமுக்கு ஆடம்பரமாக திருமணம் செய்ய ஏற்பாடு செய்து வந்தனர். இது எனக்கு அவர்கள் மீதான கோபத்தை அதிகரித்தது. மேலும், அனைத்து சொத்துக்களையும் கவுதமுக்கு எழுதி வைக்க ஏற்பாடு செய்தனர். இதனால் என் மீது பாசம் இல்லாத பெற்றோர், தம்பி ஆகியோர் இருப்பதைவிட சாவதே மேல் என எண்ணினேன்.
இதையடுத்து, 3 பேரையும் தீர்த்துக்கட்ட வேண்டும் என திட்டம் தீட்டினேன். கடந்த 14ம் தேதி இரவு பெற்றோரும், தம்பியும் ஒரே அறையில் தூங்க சென்றனர்.

திட்டமிட்டபடி, பீர்பாட்டில்களில் பெட்ரோலை நிரப்பி துணியால் திரி செய்து வைத்திருந்தேன். அதிகாலை 3 மணி அளவில் எனது பெற்றோர் மற்றும் தம்பி படுத்திருந்த அறையில் பெட்ரோலை ஊற்றினேன். பின்னர் ஏற்கனவே பெட்ரோல் ஊற்றி வைத்திருந்த பீர்பாட்டிலில் தீயை பற்ற வைத்து, அறையில் வீசினேன். இதில், பாட்டில் வெடித்து அறை முழுவதும் தீப்பிடித்தது. மேலும் அவர்கள் யாரும் தப்பி விடகூடாது என்பதற்காக வெளிப்பகுதியில் தாழ்ப்பாள் போட்டேன். இதனிடையே தீக்காயங்களுடன் பின்பக்க கதவு வழியாக தப்பித்து மெயின் கேட் அருகே தந்தை ராஜி வெளியே வந்து காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என கதறினார்.

இதனால் அதிர்ச்சியடைந்த நான்  மாட்டிக்கொள்வோமோ என்ற அச்சத்தில் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து தந்தையை சரமாரியாக வெட்டி கொலை செய்தேன். பின்னர் ஏசி வெடித்ததாக நாடகம் ஆடினேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார். இக்கொலை சம்பவத்தில் கோவர்த்தனன் அவரது மனைவி தீபா காயத்ரியிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அவரும் கொலைக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது. பின்னர், 2 பேரையும் திண்டிவனம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி மற்றும் பீர்பாட்டிலின் உடைந்த பகுதிகளை கைப்பற்றினர்.

Tags : victims ,brothers , AC explosion, killing of 3 persons, incident, rally, killing property, AIADMK, wife
× RELATED வாக்குச்சாவடி மையங்களில் மயங்கி விழுந்து 2 பேர் பலி: சேலத்தில் சோகம்