கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் அம்மா குடிநீர் நிலையத்துக்கு தேவையான நீர், சுமார் 500 அடி ஆழத்தில் ராட்சத போர் மூலம் உறிஞ்சப்படுகிறது. ஒரு நாளைக்கு லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் எடுத்து சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், கன்னியாகுமரி, திண்டுக்கல், விருதுநகர், உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களுக்கு அனுப்பப்படுகிறது. இதனால் கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் அதலபாதாளத்துக்கு சென்றுவிட்டது. ஆத்துப்பக்கம், பெத்திக்குப்பம், மாதர்பாக்கம் ஆகிய பகுதிகளில் விவசாயம் செய்வதற்கும், குடிநீருக்கும் மக்கள் தினந்தோறும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.