சென்னை: மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என நல்லகண்ணு தெரிவித்தார். கல்பாக்கம் அணுவாற்றல் ஊழியர் சங்க 40வது ஆண்டு மாணிக்க விழா கல்பாக்கத்திலுள்ள பல்நோக்கு சமுதாயக் கூடத்தில் நேற்று நடந்தது. விழாவிற்கு சங்க நிறுவனத் தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பரமையாகிருஷ்ணா, ஜெயக்குமார் மற்றும் வழக்கறிஞர் கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சிறப்பாளராக கலந்துக் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு விழா மலரை வெளிட்டார்.
பின்னர் அவர் அளித்த பேட்டி:ஆட்சி, அதிகாரம் தங்கள் கையில் இருப்பதால் அந்த நம்பிக்கையில் தேர்தல் முடிவுக்கு முன்னரே தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் என கல்வெட்டில் பொறித்துள்ளனர். தனி மனித சுதந்திரம், கருத்துரிமை மறுக்கப்படுவதற்கு உதாரணமே கமல் விஷயத்தில் எடுக்கின்ற நடவடிக்கைகள். மத்தியிலும், மாநிலத்திலும் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார். விழாவில் சங்க நிர்வாகிகள் சதாசிவம், மணியாச்சாரி, சங்கையா, ஒர்லிக்கர், அன்பரசன், மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.