×

நீட்டிப்பு ஆணை வெளியிடாததால் நிறுத்தி வைக்கப்பட்டது 8,462 ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாத ஊதியத்தை வழங்க உத்தரவு

சேலம்: தமிழக பள்ளிக்கல்வித்துறையில், கடந்த 2011-12ம் ஆண்டு அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளுக்கு கூடுதலாக 1,590 முதுகலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இதேபோல், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின்கீழ் 6,872 பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் 8,462 பேர் புதிதாக நியமனம் செய்யப்பட்டனர். இவர்களின் பணி நீட்டிப்பு காலம் கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதியுடன், முடிவுற்றது. இதனையடுத்து, பணி நீட்டிப்பு வழங்குவது குறித்த கருத்துரு பள்ளிக்கல்வி இயக்குனரால் அனுப்பப்பட்டு பரிசீலனையில் உள்ளது. இதனிடையே, துறைத்தலைவரின் அதிகாரத்தின் அடிப்படையில், கடந்த ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் ஆகிய 3 மாதங்களுக்கு ஊதியம் கொடுப்பானை வழங்கப்பட்டு, சம்பளம் வழங்கப்பட்டது. ஆனால், அதன்பின்னர், சம்பள நீட்டிப்பு தொடர்பான ஆணை எதுவும் வெளியிடப்படவில்லை.

இதனால், ஏப்ரல் மாதத்திற்கான ஊதியம் கிடைக்காமல் 8,462 ஆசிரியர்களும் பரிதவித்து வந்தனர். எனவே, உடனடியாக ஊதியம் கிடைக்கச் செய்ய வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து கடந்த 8ம் தேதி, தினகரன் நாளிதழிலும் செய்தி வெளியானது. இதன்பேரில் இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகள், ஏப்ரல் மாதத்திற்கான சம்பள நீட்டிப்பு ஆணையை வெளியிட்டுள்ளனர். அதன்படி, 8,462 ஆசிரியர்களுக்கும், கடந்த மாதத்திற்கான ஊதியம் வழங்கப்படவுள்ளது. இதனால், ஆசிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags : teachers , Extension order, teacher, monthly pay
× RELATED கனவு ஆசிரியர்களாக தேர்வு...