சென்னை: சென்னையில் இருந்து துபாய் செல்லும் தனியார் பயணிகள் விமானம் நேற்று காலை 7.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படத் தயாரானது. அதில் பயணம் செய்ய வந்த பயணிகள் ஒரு தனியார் ஏர்லைன்ஸ் விமான கவுன்டரில் தங்களது இ-டிக்கெட்டை கொடுத்து போர்டிங் பாஸ் வாங்கிக் கொண்டிருந்தனர். அப்போது கடலூர் மாவட்டம் பன்ருட்டியை சேர்ந்த முகமது செரீப் (36) என்பவர் இதே விமானத்தில் துபாய் செல்வதற்காக வந்தார். அவரும் அந்த கவுன்டரில் போர்டிங் பாஸ் வாங்க தனது இ-டிக்கெட்டை கொடுத்தார். கவுன்டரில் இருந்த 23 வயது பெண் ஊழியர் இவரது இ-டிக்கெட்டை வாங்கி போர்டிங் பாஸ் எடுத்து கவுன்டர் வழியாக பயணி முகமது செரீப்பிடம் கொடுத்தார். அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் திடீர் என பயணி முகமது செரீப் அந்த பெண் ஊழியரின் கையை பிடித்து வெளியே இழுத்து அந்த கையில் அழுத்தமாக பிடித்து முத்தம் பதித்தார். இதையடுத்து அந்த பெண் ஊழியர் அதிர்ச்சி அடைந்து கையை இழுத்து கதறி அழுதார். இதைக்கேட்டு மற்ற ஊழியர்கள் அங்கு ஓடிவந்து, விவரம் அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
அதற்குள் முகமது ெசரீப் தனது போர்டிங் பாசை எடுத்துக்கொண்டு அவசரஅவசரமாக பாதுகாப்பு சோதனை பகுதிக்குள் சென்று விட்டார். உடனே பாதுகாப்பு சோதனையில் இருந்தவர்கள் ஓடிச்சென்று முகமது செரீப்பை கண்டுபிடித்து மீண்டும் கவுன்டர் பகுதிக்கு அழைத்து வந்தனர். ஆனால் அந்த பயணியோ, தான் அது போல் செய்யவில்லை என்று மறுத்தார். விமான நிலைய மேலாளர் அந்த பகுதியில் உள்ள ரகசிய கண்காணிப்பு கேமரா காட்சிகளை போட்டு ஆய்வு செய்தார். அதில் முகமது செரீப், பெண் ஊழியரின் கையை பிடித்து இழுத்து கையில் முத்தம் கொடுத்தது அப்பட்டமாக தெரிந்தது. இதையடுத்து விமான நிலைய மேலாளர் அந்த பயணியை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தார்.
தனியார் விமான நிலைய அதிகாரிகள் அந்த பயணி பற்றி போலீசில் புகார் கொடுத்தனர். இதனை தொடர்ந்து முகமது செரீபின் துபாய் பயணம் ரத்து செய்யப்பட்டது. இவர் துபாயில் ஒரு தனியார் நிறுவனத்தில் சூபர்வைசராக வேலை செய்கிறார். 2 மாத விடுமுறையில் சென்னைக்கு வந்து மீண்டும் துபாய் செல்லும்போதுதான் வரம்பு மீறி செயல்பட்டு மாட்டிக்கொண்டார் என்பது விசாரணையில் தெரியவந்தது. அவரை பெண் வன்கொடுமை சட்டத்தில் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.