தூத்துக்குடி : தூத்துக்குடி ‘வாழை விஞ்ஞானி’ முருகன் கோடைக்கு ஏற்ற வாழைத்தண்டு சர்பத் தயாரித்து பொதுமக்களுக்கு விநியோகித்து வருகிறார். தூத்துக்குடி பிரையன்ட் நகரைச் சேர்ந்தவர் முருகன் (42). இவர் வாழை நாரில் இருந்து பட்டு நூல் பிரித்தெடுக்கும் கருவியை தயாரித்து புகழ் பெற்றவர். மத்திய, மாநில அரசுகளின் விருதுகளை பெற்றவர். தற்போது மருத்துவ குணம் கொண்ட வாழைத்தண்டு மூலம் சர்பத் தயாரித்துள்ளார்.
இதன் தயாரிப்பு முறைகளையும் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தி வருவதுடன், கோடையை முன்னிட்டு முக்கிய பகுதிகளில் இந்த சர்பத்தை தயாரித்து பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார். இதுகுறித்து முருகன் கூறுகையில், வாழைத்தண்டை துண்டுகளாக வெட்டி ‘ரிவெர்ஸ் ஆஸ்மாசிஸ் பிராசஸ்’ முறையில் சர்க்கரை அல்லது சீனி கலந்த கரைசலில் 48 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் அதனை எடுத்து நன்னாரிவேர், எலுமிச்சை, இஞ்சி, ஏலக்காய் உள்ளிட்டவை கொண்டு சர்பத்தாக தயாரிக்கலாம்.
வாழைத்தண்டில் பெக்டின் என்ற மருந்து பொருள் இருப்பதால், கேன்சர் செல்களை அழிக்கும். ஜீரண சக்தியை பெருக்கும். நார்ச்சத்து நிறைந்தது. சிறுநீரக கற்களை கரைக்கும் திறன் கொண்டது. ஐஸ் சேர்த்தும் பருகலாம். கோடை காலத்திற்கு ஏற்ற குறைந்த விலையில் மருத்துவ குணம் கொண்ட பானமாக தயாரித்து பருகலாம். இதன் தயாரிப்பு முறைகள் குறித்து தெரிந்து கொள்ள யார் வேண்டுமானாலும் அணுகலாம், என்றார்.