திருவில்லிபுத்தூர் : திருவில்லிபுத்தூர் பகுதியில் வெயில் கொளுத்தி வருவதால் தினமும் 2 மணிநேரம் ஆண்டாள் கோயில் யானை குளித்து மகிழ்கிறது. அக்னி நட்சத்திரம் காலம் என்பதால் திருவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது காலை எட்டு மணிக்கு கொளுத்த ஆரம்பிக்கும் வெயிலின் தாக்கம் மாலை 6 மணி வரை நீடிக்கிறது.
எனவே கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் யானை ஜெயமால்யதா (15) காலை தினமும் இரண்டு மணி நேரம் குளித்து மகிழ்கிறது.
கோடை காலம் துவங்கும் முன்னர் ஒரு மணி நேரம் மட்டுமே தண்ணீரில் குளித்து மகிழ்ந்து வந்த ஜெயமால்யதா யானை கோடையை சமாளிக்க வகையில் இரண்டு மணி நேரம் யானை பாகன்கள் குளிக்க வைக்கின்றனர்.
இதுகுறித்து பக்தர் ஒருவர் கூறும்போது, ‘தமிழகத்தின் பல்வேறு பகுதியில் உள்ள கோயில்களில் உள்ள யானைகளுக்கு ஷவர் அமைத்துக் கொடுத்து குளிக்கும் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அதுபோல் ஆண்டாள் கோயில் யானைக்கு ஷவர் அமைத்து தர வேண்டும்’ என்றார்.