×

கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மயில்களுக்கு தண்ணீர், உணவு வழங்கக்கோரி வழக்கு


* 15 நாட்களில் நடவடிக்கை எடுக்க உத்தரவு


மதுரை : புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மயில்களுக்கு தேவையான தண்ணீர் மற்றும் உணவு வசதியை ஏற்படுத்தக்கோரிய வழக்கில், 15 நாட்களில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கலெக்டருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டையை சேர்ந்த தனபதி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
ராஜகோபால தொண்டைமான் மன்னனுக்கு சொந்தமான இடத்தில் சுமார் 96 ஏக்கர் பரப்பளவில் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ளது. பொதுமக்கள் அணுகுவதற்கு எளிதாக இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக, 1977ல் ராஜகோபால தொண்டைமான் மன்னன் ரூ.34 லட்சத்துக்கு இந்த இடத்தை விற்பனை செய்தார். ஆரம்பத்தில் இங்கு பல்வேறு வகையான மரங்கள் இருந்தன.

ஆயிரக்கணக்கான மயில்கள், குரங்குகள் இருந்தன. மேலும் ஏராளமான குளங்களும் இருந்தன. இப்பகுதியில் 1974ம் ஆண்டு யூகலிப்டஸ் மரங்கள் நடப்பட்டன. இதனால் ஒட்டுமொத்த சுற்றுச்சூழலும் பாதிக்கப்பட்டது. தண்ணீர் பற்றாக்குறை காரணமாக விலங்குகள், பறவைகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்தது. இந்நிலையில் கஜா புயல் பாதிப்பால் பல மரங்கள் வேரோடு சாய்ந்ததால், பல மயில்கள் இடம் பெயர்ந்து சென்றுவிட்டன.

கடும் வறட்சி காரணமாக, தற்போது இங்குள்ள குளங்கள் வறண்டு கிடக்கின்றன. இதனால் இப்பகுதியில் உள்ள சுமார் 500 மயில்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக புதுக்கோட்டை கலெக்டரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மயில்களுக்கு தேவையான தண்ணீர் மற்றும் உணவு வசதியை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கோரியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் நிஷாபானு, தண்டபாணி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத்தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் நீதிபதிகள், ‘‘மனுதாரர் புதிதாக கலெக்டரிடம் மனு அளிக்க வேண்டும். அதனடிப்படையில் 15 நாட்களில் புதுக்கோட்டை கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.


Tags : peasants ,Collector , Pudukkottai ,Collector Office,foods ,peacock
× RELATED குடிநீர் பிரச்னைகளுக்கு...