கரூர்: மக்கள் நீதி மய்யம் குடும்பத்தாருக்கும், ரசிகர்களுக்கும் அன்பு வேண்டுகோள். நிகழும் சம்பவங்கள், நம் நேர்மைக்கும் பொறுமைக்கும் நடக்கும் அக்னிப்பரீட்சை. ஆர்ப்பாட்டக் கூட்டம் நம்மை வன்முறைக்கு வலிந்து இழுக்கும். மயங்காதீர். அவர்களின் தீவிரவாதம் நம் நேர்மை வாதத்திற்கு முன் தோற்கும். நாளை நமதே என்று தொண்டர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். கரூர் வேலாயுதம்பாளையத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் மக்கள் நீதிமய்யம் தலைவர் கமலஹாசன் பேசினார். இங்கு பணப்பட்டுவாடா தொடங்கி விட்டது. நீங்கள் நேர்மையாக இவ்வளவுபேர் இங்கு கூடியிருக்கிறீர்கள். மக்கள் தான் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
எங்களால் யாருக்கும் எந்த பிரச்னையும் இல்லை. இருந்தாலும் பாதுகாப்பு கொடுத்ததற்காக காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பேசினார். அதன்பின்னர் கமல் மேடையைவிட்டு கீழே இறங்கினார். அப்போது, அவரை கட்சி நிர்வாகிகள் சூழ்ந்து கொண்டு பாதுகாப்பாக வேனுக்கு அழைத்து சென்றனர். இந்தசமயத்தில் மர்மநபர் ஒருவர் மேடையை நோக்கி செருப்பையும், முட்டையையும் வீசினார். அதற்குள் கமல் வேனில் ஏறி சென்று விட்டார். மர்ம நபரின் செயலால் ஆத்திரமடைந்த கமலின் கட்சி தொண்டர்கள் செருப்பு வீசியவரை மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்தனர்.
போலீசார் அவரை காப்பாற்றி அங்கிருந்த கடையின் முன்பகுதியில் அமர வைத்தனர். மேலும் அவரை தாக்காமல் சுற்றி நி்ன்று கொண்டனர். இதையறிந்த கட்சி தொண்டர்கள் அங்கு அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். பிரதமர் மோடிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து இச்சம்பவத்தை கேள்விப்பட்டதும் கரூர் மாவட்ட எஸ்பி விக்ரமன் அதிரடி படையினருடன் அப்பகுதிக்கு வந்தார். கூடுதல் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர். இதனிடையே போலீசார் விசாரணையில், செருப்பு வீசிய நபர் மரவாபாளையம் பகுதியை சேர்ந்த பாஜ கட்சி தொண்டர் ராமகிருஷ்ணன் எவ்பது தெரியவந்தது. மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.