×

4 தொகுதி இடைத்தேர்தல் வாக்காளர்களுக்கு ஓபிஎஸ், இபிஎஸ் கடிதம்

சென்னை: 4 தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க கோரி வாக்காளர்களுக்கு ஓ.பி.எஸ், இ.பி.எஸ் கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர். அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதம்: எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் தலைமையின் கீழ் நடந்த அரசுகள் தமிழ் நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழக மக்களின் வாழ்வில் ஒளியேற்றவும் உருவாக்கி செயல்படுத்திய திட்டங்கள் ஏராளம். அந்த இரு பெரும் தலைவர்கள் காட்டிய வழியில் மக்களுக்கு தொண்டு செய்வது ஒன்றே தலையாய லட்சியமாய்க்கொண்டு ஜெயலலிதா கண்ட கனவை நனவாக்க வேண்டும் என்ற ஒரே கொள்கையாக பணியாற்றி வருகின்றோம். அத்திக்கடவு-அவினாசி நீர்ப்பாசனத் திட்டம், எதிர்காலத் தமிழகத்தின் தண்ணீர் தேவைகளை நிறைவு செய்ய காவிரி-கோதாவரி நதிகள் இணைப்புத் திட்டம், சுற்றுச்சூழலை பாதுகாத்திட பிளாஸ்டிக் ஒழிப்பு, ஏழை எளியோர் நலன் காக்க பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம், வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்வோருக்கு ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம் என்று எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகின்றோம். 19ம் தேதி நடைபெற உள்ள சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் ‘இரட்டை இலை’ சின்னத்திற்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளனர்.

Tags : OPS ,voters , 4 block, by-election, voter, OPS, EPS
× RELATED ஒரிஜினலை ரவுண்டு கட்டும் டூப்ளிக்கேட்டுகள்: ‘OPS’களின் அட்ராசிட்டி