சனா: சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படை ஏமனில் நடத்திய வான்வெளி தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். ஏமன் நாட்டின் தலைநகர் சனா, ஹவுதி போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. இவர்களுக்கு சவுதி அரேபியாவின் பகை நாடான ஈரான் பகிரங்கமாக ஆதரவு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் சவுதி அரேபியாவில் உள்ள எண்ணெய் குழாய்கள் மீது ஏமனில் உள்ள ஹவுதி போராளிகள் 2 நாட்களுக்கு முன் தாக்குதல் நடத்தினர்.
இதற்கு பதிலடியாக சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படை நேற்று சனா பகுதியில் திடீரென தாக்குதல் நடத்தியது. இதில் 4 குழந்தைகள் உள்பட 6 பேர் பரிதாபமாக பலியாகினர். 10 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.