பிரடோரியா: பாகிஸ்தான் பெண்கள் அணி தென் ஆப்ரிக்கா பெண்கள் அணியுடன் 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. தென் ஆப்ரிக்காவில் நடைப்பெற்று வரும் இந்தபோட்டிகளில் ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் டிரா ஆனது. இந்நிலையில் முதல் டி20 போட்டி நேற்று முன்தினம் பிரடோரியாவில் நடைப்பெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது. தென் ஆப்ரிக்கா வீராங்கனைகள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். ஆனால் நிலைத்து விளையாடிய சோலே டிரையன் 43 ரன்களும், டூ பிரிஸ் 23 ரன்களும் எடுத்ததால் அணி 20 ஓவர்கள ்முடிவில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 119 ரன்கள் எடுக்க முடிந்தது. பாகிஸ்தான் தரப்பில் சானா மிர் 3 விக்கெட்களும், நிடா தர் 2 விக்கெட்களும், ஆலியா ரியாஸ், நஷ்ரா சாந்து ஆகியார் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் ஓவருக்கு 6 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. தொடக்க வீராங்கனைகள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தாலும் நிடா தர் 53 ரன்களும், கேப்டன் பிஸ்மா மரூப் ஆட்டமிழக்காமல் 53 ரன்களும் எடுத்து அணி இலக்கை எட்ட உதவினர். அதனால் பாகிஸ்தான் அணி 18 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்து 7 விக்ெகட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென் ஆப்ரிக்கா தரப்பில் மரிசன்னே காப், மசபடா கிளாஸ், டுமி செகுகூனே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். ஆட்டத்தின் சிறந்த வீராங்கனையாக பாகிஸ்தான் ஆல் ரவுண்டர் நிடா தர் தேர்வு செய்யப்பட்டார். இந்த 2 அணிகளும் விளையாடும் 2வது டி20 போட்டி நாளை பீட்டர்மரிஸ்பர்கில் நடைபெறுகிறது.