புதுடெல்லி: மத்திய அரசு நடத்தும் ஆசிரியர் தகுதி தேர்வில் (சிடிஇடி), பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீ–்டு அளிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவில், சிபிஎஸ்இ, மத்திய அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாணவர் சேர்க்கை மற்றும் வேலைவாய்ப்பில் பொருளாதாரத்தில் பிங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கக் கோரி மத்திய அரசு கொண்டு வந்த சட்ட திருத்தம் கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இந்நிலையில் மத்திய அரசு நடத்தும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு விண்ணப்பித்த பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினர் சிலர், தங்களுக்கு இந்த தேர்வில் 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இந்த மனுவை கடந்த 13ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘‘தகுதி தேர்வில் எந்த ஒதுக்கீடும் இருக்க முடியாது. இந்த ஒதுக்கீடு அட்மிஷனுக்குதான் பொருந்தும். இந்த தேர்வு அறிவிப்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கும் எந்த ஒதுக்கீடும் அறிவிக்கப்படவில்லை. இந்த இடஒதுக்கீடு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது’’ என கூறியது. இது தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தின் விடுமுறை கால அமர்வில் உள்ள நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, சஞ்சீவ் கண்ணா அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த கோரிக்கை தொடர்பாக சிபிஎஸ்இ, மத்திய அரசு ஆகியவை ஜூலை 1ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.