×

ஒரே நாளில் ஆசிரியர் தகுதித்தேர்வும் பி.எட் இறுதியாண்டுத் தேர்வும் நடைபெறுகிறது : மாணவ, மாணவியர் அதிர்ச்சி

சென்னை : ஆசிரியர் தகுதித்தேர்வும் பி.எட் இறுதியாண்டுத் தேர்வும் ஒரே நாளில் நடப்பதால் மாணவ, மாணவியர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒரே நாளில் இரு தேர்வுகளையும் எழுதுவது சாத்தியமில்லை என்பதால் தேர்வுத் தேதியை மாற்ற மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பள்ளிகளில் பணியாற்ற டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்

இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி அனைத்து வகை பள்ளிகளிலும் ஆசிரியர்களாக பணியாற்ற டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் 1-5ம் வகுப்பு வரையும் 2ம் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் 6-8ம் வகுப்பு வரையும் பாடம் நடத்த முடியும். நடப்பாண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பாணை கடந்த பிப்ரவரி 28ம் தேதி வெளியானது.

மேலும், தேர்விற்கு விண்ணப்பிக்க மார்ச் இறுதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டது. பின்னர், இணையதள பிரச்னை காரணமாக, ஏப்ரல் 12 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது. இதற்கு 6 லட்சத்து 4,000 பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர். இதையடுத்து தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜூன் 8-ஆம் தேதி முதல் தாளும், ஜூன் 9-ஆம் தேதி 2-ஆம் தாளும் நடைபெறும் என்றும், தேர்வுகள் காலை 10 மணி முதல் நண்பகல் 1 மணி வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

 ஒரே நாளில் பிஎட் தேர்வு

இந்நிலையில் ஆசிரியர் தகுதித்தேர்வு முதல் தாள் நடைபெறும் அதே நாளில் பிஎட் தேர்வும் நடைபெற இருப்பதால் மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர். முதல் தாள் தேர்வு நடைபெறும் 8ம் தேதி பி.எட் படிப்புகளுக்கான தேர்வும் நடைபெற உள்ளது. பிஎட் படித்து கொண்டிருக்கும் மாணவர்களும் முதல் தாள் எழுதலாம் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது ஒரே நாளில் 2 தேர்வுகளும் நடைபெற இருப்பதால் மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர். 


Tags : teacher ,examination ,Student ,B.Tech , Teacher, Eligibility, B.Ed, Shock, Students
× RELATED கல்லூரி மாணவர்களின் வாக்காளர்...