×

பேரையூர் அருகே புதிதாக போடப்பட்டு கொஞ்ச நாளிலேயே கண்டமான சாலை

பேரையூர்: பேரையூர் அருகே புதிதாக அமைக்கப்பட்ட தார்ச்சாலை சில மாதங்களிலேயே சேதமடைந்துவிட்டது. பணிகள் தரமில்லை என மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பேரையூர் தாலுகா, சேடபட்டி ஒன்றியத்திற்கு உட்பட்டு சாப்டூர்-வண்டப்புலி சாலை உள்ளது. இந்த சாலை கடந்த 8 ஆண்டுகளாக முற்றிலும் சேதமடைந்து குண்டும் குழியுமாக இருந்தது. இதனை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன் தார்ச்சாலை போடப்பட்டது. இந்த சாலை சாப்டூர் அணைக்கரைப்பட்டி பிரிவிலிருந்து அய்யம்பட்டி வழியாக வண்டப்புலி வரை போடப்பட்டது. சாலை போடப்பட்ட சில மாதங்களிலேயே ஓரங்களில் அரிக்கப்பட்டு மீண்டும் குண்டும் குழியுமாக மாறிவிட்டது. இதனால் பணிகள் தரமில்லை என மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மக்கள் கூறுகையில், ‘‘இந்த சாலையில் பேரையூர், சாப்டூர், அத்திபட்டி, எழுமலை, எம்.கல்லுப்பட்டி, டி.கிருஷ்ணாபுரம், டி.ராமநாதபுரம், உசிலம்பட்டி, தேனி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு பேருந்துகள் சென்று வருகின்றன. மேலும் இப்பகுதிகளுக்கு முக்கிய இணைப்புச்சாலையாக உள்ளதால் அதிகமான வாகன போக்குவரத்து உள்ள சாலையாகும். சாலையை சீரமைத்த சில மாதங்களிலேயே சேதமடைந்துவிட்டது. சாலையின் இருபுறங்களிலும் மண் அரிக்கப்பட்டு பள்ளமாக கிடக்கிறது. இதனால் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் எதிர் எதிரே வரும்போது விலகிச்செல்ல இடமில்லாமல் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும் இரவுநேரங்களில் இந்த பள்ளங்களில் வாகனங்கள் மற்றும் டூவீலர்களில் செல்பவர்கள் விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். இதனால் இந்த சாலையில் இரவு நேரங்களில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. பெயரளவிற்கு சாலைபோட்டு அதற்கான தொகையை மட்டுமே எடுத்துள்ளனர். அது மக்களின் பயன்பாட்டிற்கு வரவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இந்த சாலையிலுள்ள குண்டும், குழியை நீக்கி சாலையை சீர்படுத்த வேண்டும். பணிகளை தரமின்றி மேற்கொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என வலியுறுத்தினர்.

Tags : road ,Peraiyur , Peraiyur, road
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி