×

திருப்பரங்குன்றம் தொகுதியில் பணப்பட்டுவாடா செய்த 4 அதிமுகவினர் கைது

மதுரை: திருப்பரங்குன்றத்தில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த, அதிமுகவினர் 4 பேர் கைது செய்யப்பட்டனர். திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக சார்பில் முனியாண்டி போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக 8 அமைச்சர்கள், 17 மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் திருப்பரங்குன்றத்தில் தங்கியிருந்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தொகுதியில் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்து வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.

மதுரை வில்லாபுரம் பகுதியில் அதிமுகவினர், பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டுள்ளதாக பறக்கும் படை குழுவுக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் வணிக வரித்துறை துணை அலுவலர் அப்துல்ரகுமான் தலைமையிலான பறக்கும் படை குழுவினர் வில்லாபுரம் வாசுகி தெருவில் நேற்று சோதனை நடத்தினர்.

அதிகாரிகளை பார்த்ததும் அங்கு கும்பலாக நின்றிருந்த அதிமுகவினர் ஓடிவிட்டனர். இதில் வாக்காளர் பட்டியலுடன் தப்பியோட முயன்ற 4 பேரை பிடித்தனர். அவர்களிடமிருந்து ரூ.74 ஆயிரத்தை கைப்பற்றினர். விசாரித்தபோது இப்பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்ததாக கூறினர்.

விசாரணையில், 4 பேரும் மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த தமிழரசன், முத்துமாரி, கிருஷ்ணகிரி ஊத்தங்கரையை சேர்ந்த சிவக்குமார் மற்றும் ராமசாமி என்பது தெரிந்தது. 4 பேரையும் பறக்கும்படை அதிகாரிகள், அவனியாபுரம் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். போலீசார், அவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர். நேற்று அதிமுகவினர் திருப்பரங்குன்றம் தொகுதிக்குள் தலா ரூ.1,500 வீதம் பணம் விநியோகித்ததாக தெரிகிறது.

Tags : constituency , Tiruparankundam block, cashing, hijacker, arrest
× RELATED கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில்...