ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் பணியில் இருந்த போக்குவரத்து இன்ஸ்பெக்டரை தாக்கி கழுத்தில் கடித்த மினி வேன் டிரைவரை போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரம் கேணிக்கரை சந்திப்பில் நேற்று பகல் நேரத்தில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் விஜயகாந்த், காவலர்கள் சத்தியராஜ், சுமித்ரா ஆகியோர் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக அளவிற்கு அதிகமான பாரம் ஏற்றி வந்த மினி வேனை, காவலர் சத்தியராஜ் தடுத்து நிறுத்தினார். ஆனால் வேன் டிரைவர் ராமநாதபுரம் அருகே உச்சிப்புளி துத்திவலசை சேர்ந்த கர்ணன் (52) நிறுத்தாமல் சென்றார்.
இதனால் காவலர் சத்தியராஜ் விரட்டி சென்று தடுத்து நிறுத்தினார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த இன்ஸ்பெக்டர் விஜயகாந்த், டிரைவரை வேனிலிருந்து வெளியே இழுத்து சென்றார். உடனே டிரைவர், பதிலுக்கு இன்ஸ்பெக்டரை தாக்கினார். இருவரும் நடுரோட்டில் கட்டிப் புரண்டு சண்டை போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்பகுதியினர் சினிமா சூட்டிங் நடப்பதாகவே நினைத்தனர். சண்டை மும்முரமானதில், டிரைவர், இன்ஸ்பெக்டர் விஜயகாந்த்தை கீழே தள்ளி 2 முறை கழுத்தில் கடித்துள்ளார்.
இதனால் அவரால் எழுந்திருக்கவே முடியவில்லை. மற்ற காவலர்கள் அவரை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் அவரது கழுத்தில் 5 தையல்கள் போட்டனர். தொடர்ந்து இன்ஸ்பெக்டர் விஜய்காந்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து, வேன் டிரைவர் கர்ணனை கைது செய்தனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.