×

திண்டிவனத்தில் ஏசி வெடித்து புதுமாப்பிள்ளை, தாய், தந்தை பலி

திண்டிவனம்: திண்டிவனத்தில் அதிமுக பிரமுகர் வீட்டில் ஏசி வெடித்து தாய், தந்தை, மகன் ஆகிய 3 பேர் பலியானார்கள். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் காவேரிபாக்கம் சுப்பராயன் தெருவை சேர்ந்தவர் ராஜி (60). வெல்டிங் ஒர்க்‌ஷாப் நடத்தி வந்தார். இவரது மனைவி கலைச்செல்வி (52), இளைய மகன் கவுதம் (27). ராஜீ உள்ளிட்ட மூவரும் நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் ஏசி அறையில் தூங்கி கொண்டிருந்தனர்.
 
அதிகாலை 3 மணியளவில் ஏசி திடீரென வெடித்தது. சத்தம் கேட்டு 3 பேரும் திடுக்கிட்டு எழுந்தனர். ஆனால் அதற்குள் அறை முழுவதும் தீப்பிடித்து புகை மூட்டமானது. இதனால் உயிர் தப்பிக்க 3 பேரும் அலறியுள்ளனர். ஆனால் அறையில் உள்பக்கமாக பூட்டி இருந்ததால் வெளியில் உள்ளவர்களால் அவர்களை காப்பாற்ற முடியவில்லை. உடனடியாக திண்டிவனம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைப்பதற்குள் ராஜீ, கலைச்செல்வி, கவுதம் ஆகிய 3 பேரும் உடல்கருகி உயிரிழந்தனர். 3 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தடயவியல் உதவி இயக்குனர் முத்து, அறிவியல் ஆய்வு அலுவலர் ராஜீ ஆகியோர் தலைமையிலான நிபுணர்கள் வந்து ஆய்வு செய்தனர்.

இதுதொடர்பாக திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு மின் கசிவு காரணமா? அல்லது உயரழுத்த மின்சாரம் வந்ததால் ஏசி வெடித்ததா என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். 20 நாளில் திருமணம்:  தீயில் கருகி பலியான கவுதமுக்கு நிச்சயம் செய்யப்பட்டு இன்னும் 20 நாளில்  திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இதற்காக உறவினர்களுக்கு  பத்திரிகை கொடுத்து வந்தனர். ஆனால், இந்த  சம்பவத்தை தொடர்ந்து குடும்பமே சோகத்தில் மூழ்கியது.

Tags : Tindivanam , Tindivanam, AC eruption, new girl, mother, father kills
× RELATED திண்டிவனம் அருகே 13 வயது சிறுமியிடம்...