புழல்: புழல் 32வது வார்டில் திறந்த நிலை கழிவுநீர் கால்வாயில் கற்களை கொட்டி தனியார் நிறுவனத்தினர் ஆக்கிரமிக்கின்றனர். இதனால் அங்கு அடைப்பு ஏற்பட்டு, சாலைகளில் கழிவுநீர் ஆறாக ஓடுகிறது. சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலம் புழல் 32வது வார்டான லட்சுமிபுரம், பாரதியார் தெருவில் திறந்த நிலை கழிவுநீர் கால்வாய் உள்ளது. இப்பகுதியில் 300க்கும் மேற்பட்ட வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் இந்த கால்வாயில் திறந்துவிடப்படுகிறது.
இந்நிலையில் அங்குள்ள தனியார் நிறுவனத்தினர் தங்களது வாகனங்கள் வந்து செல்வதற்காக அந்த கால்வாயில் பெரிய கற்களை கொட்டி ஆக்கிரமித்துள்ளனர். இதனால் அங்கு அடைப்பு ஏற்பட்டு, ஆங்காங்கே கழிவுநீர் வெளியேற வழியின்றி, சாலைகளில் ஆறாக ஓடுகிறது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் அங்கு வசிக்கும் மக்களுக்கு பல்வேறு தொற்றுநோய்கள் பரவுகிறது.
இதுகுறித்து மண்டல மற்றும் வார்டு அலுவலக அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே கால்வாயில் உள்ள தனியார் ஆக்கிரமிப்புகளை அகற்றி கழிவுநீர் சீராக செல்வதற்கு சம்பந்தப்பட்ட மாநகராட்சி உயர் அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.