×

பக்கிங்காம் கால்வாயில் மேம்பால பணி துவக்கம் திருவொற்றியூர்-மணலி தடத்தில் போக்குவரத்து தற்காலிக மாற்றம்: நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல்

திருவொற்றியூர்: பக்கிங்காம் கால்வாய் மீது மேம்பாலம் கட்டும் பணிகள் நடப்பதால் திருவொற்றியூர்-மணலி தடத்தில் போக்குவரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மணலி சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க திருவொற்றியூர் எம்ஜிஆர் நகர் அருகே பக்கிங்காம் கால்வாய் மீது மேம்பாலம் கட்டுமான பணிகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு துவக்கப்பட்டது. ரூ.42 கோடி செலவில் 530 மீட்டர் நீளம் கொண்ட இந்த மேம்பாலம் பணி கடந்த 2018 டிசம்பர் மாதம் 31ம் தேதிக்குள் முடிந்து இருக்க வேண்டும். ஆனால், பல்வேறு காரணங்களால் இந்த பணி 60% மட்டுமே முடிவடைந்த நிலையில் உள்ளது.

மேலும் மேம்பால பணி நடைபெறும் இடத்தை ஒட்டி உள்ள சர்வீஸ் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் இவ்வழியாக செல்லக்கூடிய வாகனங்கள் பெரும் சிரமத்துடன் செல்கின்றன. எனவே இந்த கால்வாய் மேம்பால பணியை துரிதப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் நெடுஞ்சாலைத்துறைக்கு கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் இந்த கால்வாய் மேம்பால பணியை விரைவாக முடிக்க நெடுஞ்சாலை துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி, பக்கிங்காம் கால்வாய் மீது உள்ள பழைய மேம்பாலத்தை அகற்றி அந்த இடத்தில் புதிய மேம்பால தூண்கள் பொருத்தும் பணி துவக்க உள்ளனர்.

இதற்காக திருவொற்றியூரில் இருந்து பேசின் சாலை வழியாக மேம்பால பணிகள் நடக்கும் பகுதியை கடந்து மணலிக்கு செல்லும் பாதை நேற்று காலை முதல் நிறுத்தப்பட்டு உள்ளது. அதற்கு பதிலாக, திருவொற்றியூர் மற்றும் ஐ.ஓ.சிக்கு சென்று வரும் வாகனங்கள் கார்கில் நகர் பக்கிங்காம் கால்வாய் ஒட்டி உள்ள சாலையில் செல்ல மாற்றுவழி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.  
             
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘தற்போது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் மேம்பால பணிகள்  நடைபெற்று வருகிறது. தற்போது பக்கிங்காம் கால்வாய் மீது கட்டுமான பணியை துவக்க உள்ளோம். அதற்காக தற்காலிகமாக இந்த வழியாக வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்று வழியில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு சில மாதங்களில், இந்த மேம்பால பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும்’’ என்றனர்.

Tags : Thiruvottiyur , Buckingham Canal, Advanced Work, Opener, Temporary, Change
× RELATED சென்னை திருவொற்றியூரில் விசாரணைக்கு...