×

செல்பி எடுத்த காதலனை கடத்தி தாக்கிய விவகாரம் அமெரிக்கா காதலி உள்பட 5 பேர் கைது: விமான நிலையத்தில் சுற்றிவளைப்பு

கீழ்ப்பாக்கம்: சென்னை நீலாங்கரையை சேர்ந்தவர் கணேசன் (50). மத்திய அரசு அதிகாரி. இவரது மனைவி சாந்தி. இவர்களது மகள் வாசவி (20). அமெரிக்காவில் உளவியல் படித்து வருகிறார். இதற்கு முன் இவர்கள் குடும்பம் புரசைவாக்கத்தில் இருந்தது. வாசவி 12ம் வகுப்பு வரை அங்குள்ள தனியார் மெட்ரிக்குலேசன் மேல்நிலை பள்ளியில் படித்துள்ளார். சர்வதேச டென்னிஸ் வீராங்கனை.

இந்தியன் பேட்மிட்டன் அசோசியேசன் உறுப்பினர். இவர் புரசைவாக்கத்தில் படித்தபோது வாசவிக்கு வேளச்சேரியை சேர்ந்த லெனின், பாஸ்கர், சரவணன், கீழ்ப்பாக்கம் ராமநாதன் தெருவை சேர்ந்த தொழிலதிபர் மகன் நவீத் அகமது (20), ஆதம்பாக்கத்தை சேர்ந்த அபிஷேக் (27), காஞ்சிபுரத்தை சேர்ந்த கோகுல் (23) ஆகிய 5 பேருடன் பழக்கம் இருந்தது. இவர்களில் தொழிலதிபர் மகன் நவீத் அகமதுவும், வாசவியும் காதலித்துள்ளனர்.

கடந்த 6ம் தேதி வாசவி தனது காலதனை அண்ணா நகரில் உள்ள பூங்காவில் சந்தித்தபோது நவீத் அகமது செல்பி எடுத்தார். அது வாசவிக்கு பிடிக்காததால் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த காதலன் நவீத் அகமது ஹெல்மட்டால் வாசவியின் தலையில் அடித்துவிட்டு தப்பி சென்றார். வாசவி தனது சக நண்பர்கள் பாஸ்கர், லெனின், சரவணன், அபிஷேக், கோகுலை அழைத்து நவீத் அகமதுவின் செல்போனை வாங்கி தரும்படி கூறியுள்ளார்.

இதனால் 5 பேரும் கடந்த வெள்ளிக்கிழமை நவீத் அகமதுவை கடத்தி ஜாபர்கான்பேட்டை முட்புதர் பகுதிக்கு கொண்டு சென்று உருட்டுக் கட்டையால் தாக்கி, அவரிடமிருந்த செல்போனை பறித்தனர். மேலும் நவீத் அகமது தொழிலதிபர் மகன் என்பதால் ரூ.2 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். பணம் தராததால் நவீத் அகமதுவை போட்டுவிட்டு 5 பேரும் தப்பி சென்றுவிட்டனர்.

இதில் படுகாயமடைந்த நவீத் அகமதுவை அக்கம் பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதனிடையே நவீத் அகமது பணம் கொடிக்காததால் விரக்தியில் செல்பி எடுத்த செல்போனை அமைந்தகரை பகுதி கூவம் ஆற்றில் வீசியுள்ளனர். இதுகுறித்து டிபி.சத்திரம் போலீசில் நவீத் அகமது அளித்த புகாரின்பேரில் கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின்படி, உதவி கமிஷனர் ராஜா மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் விநாயகம் வழக்குப்பதிவு செய்து பாஸ்கர், சரவணை கைது செய்தனர். பின்னர் தலைமறைவாக இருந்த அபிஷேக், கோகுலையும் கைது செய்தனர்.

இந்நிலையில் நேற்று காலை அமெரிக்கா தப்பிச்செல்ல முயன்றபோது விமான நிலையத்தில் வாசவியை போலீசார் கைது செய்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் கர்ப்பமாக இருந்ததாக தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட 5 பேரையும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். தலைமறைவான லெனினை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : US , Celly, lover kidnapped, attacked, affair with US girlfriend, 5 people arrested
× RELATED அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய...